சுங்கை சிப்புட்டின் பிரதான சாலையில் கார் நிறுத்துமிடம் முற்றாக அகற்றப்பட்டது!

- Muthu Kumar
- 27 Dec, 2024
(ஆர்.கிருஷ்ணன்)
சுங்கை சிப்புட், டிச. 27-
இங்குள்ள பிரதான சாலையில் பல்லாண்டுகளாக கார் நிறுத்துமிடம் இருந்து வந்தது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக இந்த மெயின் ரோடு சீரமைக்கப்பட்டது. அதன் பின் இந்த சாலை இரு வழி பாதையாக உருமாறியது. இதனால் கடந்த காலங்கள் போல கார் நிறுத்த இடம் ஒதுக்கப்படவில்லை. கார் நிறுத்தும் இடம் முற்றாக அகற்றப்பட்டு மஞ்சள் நிற கோடு போடப்பட்டது.
இதனால் கார்கள் கடைகள் முன் நிறுத்த முடியாத நிலைப்பாடு உருவாகி விட்டதாக சுங்கை சிப்புட் சிறுதொழில் வியாபாரிகள் சங்க தலைவர் தி.தனபாலன் மிகவும் மனவேதனையுடன் கூறினார்.இத்தகைய செயலால் சுமார் 100 கார் நிறுத்துமிடங்கள் முற்றாக அகற்றப்பட்டு விட்டது. இதனால் கோலகங்சார் மாவட்ட மன்றத்திற்கு சுமார் 15 ஆயிரம் ரிங்கிட் நஷ்டத்தை எதிர்நோக்கலாம். இத்தகைய நடவடிக்கையால் பயனீட்டாளர்கள் தங்கள் கார்களை கடைகளின் முன்புறத்தில் நிறுத்த முடியாமல் போய் விடுகிறது.
இதனால் வியாபாரிகள் கடந்த 3 வாரங்களாக பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர் என்று அவர் வருத்தமாக குறிப்பிட்டார்.கார்கள் கடைகளுக்கு பின்னால் நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர். ஆனால், பயனீட்டாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களை போலீஸ் தரப்பினரும், கோலகங்சார் மாவட்ட மன்றமும் இன்னமும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனத்திற்கும் அதன் ஓட்டுநருக்கும் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது. இவ்வேளையில் எந்தவொரு விபரீதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் என்று மேனாள் கோலகங்சார் மாவட்ட கவுன்சிலரும், மேனாள் சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவருமாகிய கி.மணிமாறன் கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி, இந்த கடை வரிசையில் சுமார் 4 கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு இரு வழி சாலையாக உருவானதால், காரை நிறுத்திவிட்டு நோயளிகளை கிளினிக்கில் கொண்டு சேர்க்க சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளி அல்லது சக்கரவண்டி பயன்படுத்தும் நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இருவழி சாலை திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டதால் இங்கு செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்லுகிறது. இதனால் பயங்கர சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அத்துடன் -இச்சாலையை கடக்க முயலும் முதியோர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இதனால் உயிர்சேதமும் ஏற்படலாம் என்று அச்சுறுவதாக பூக்கடை வியாபாரி சக்தி ஜெகன் • எண்டர்பிரைஸ் உரிமையாளர் ஜெகன் வருத்தமாக தெரிவித்தார்.
இந்த கார் நிறுத்துமிடத்தை அகற்றும் திட்டத்தை யார் கொண்டு வந்தாலும், மக்களின் பாதுகாப்பு மற்றும் அவசியத்திற்கு முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும். இதனால், பயனீட்டாளர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நன்கு ஆய்வு செய்த பின் இத்திட்டத்தை அமலாக்கம் செய்திருந்தால் சிறப்பாகும் என்று கமுனிங் இளைஞர் இயக்கத் தலைவர் தி.நடராஜா கூறினார்.
இவ்விவகாரம் பொதுமக்களின் அன்றாட பிரச்சினையாக இருந்து வருகிறது. இதன் தொடர்பான புகார் கடிதம் ஒன்றை சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர், லிந்தாங் மற்றும் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மிக விரைவில் அனுப்பப்படவுள்ளதாக சமூக ஆர்வலர் கி.மணிமாறன் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *