ஷரியா சட்டத்தில் எந்த குறிப்பிட்ட விதியும் இல்லை-முஃப்தி அஸ்ரி!

- Muthu Kumar
- 29 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 29 -
கல்வத் குற்றம் புரிந்தவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஷரியா சட்டத்தில் எந்த குறிப்பிட்ட விதியும் இல்லை. அது வெறும் அதிகாரத் தரப்பின் தேர்வு மட்டும்தான் என்று, பெர்லிஸ் மாநில முஃப்தி அஸ்ரி ஸைனால் அபிடின் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்தகைய தண்டனையை விதிக்கும் முடிவு, சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினரின் தேர்வாக மட்டுமே இருக்கலாம் என்றும் “அது சரியானதாகவோ தவறானதாகவோ கூட இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். "ஆதலால், அத்தண்டனையை எதிர்ப்பதானது, சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினரின் முடிவை மட்டுமே எதிர்ப்பதாகும். மாறாக, இஸ்லாத்தின் போதனையை எதிர்ப்பதாக அர்த்தமாகாது'' என்று, ஒரு முகநூல் பதிவில் அஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.
கல்வத் குற்றம் புரிந்தவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுக்குமாறு கோரும் ஷரியா சட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தனிநபர்களின் தனிப்பட்ட அவமானத்தை மறைக்க ஊக்குவிக்கும் ஷரியா சட்டத்தின் நோக்கத்திற்கு, இத்தகைய தண்டனை விதிப்பு முரண்பாடாக அமைந்துவிடக் கூடும் என்று அஞ்சப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"ஆதலால், கல்வத் குற்றத்திற்காக ஒருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படிகள் வழங்கப்படுவது அல்லாஹ் மற்றும் அவரின் தூதரின் சட்டமல்ல. ஆனால், அது சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினரின் தேர்வு மட்டும்தான் என்று அவர் குறிப்பிட்டார்.
கல்வத் குற்றம் புரிந்தவர்களுக்கு காயம் ஏற்படுத்தாமல் பிரம்படி வழங்கப்பட வேண்டும் என்று குர்ஆனிலும் சுன்னாவிலும் கூறப்பட்டுள்ள வேளையில், அது கடுமையான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று,அஸ்ரி தெரிவித்தார்.
கல்வத் குற்றச் செயலுக்கு நான்கு நம்பகமான சாட்சிகள் சாட்சிகளாக இருக்க வேண்டும். ஓர் ஆணும் பெண்ணும் பொதுவில் அவ்வாறு குற்றம் புரிந்திருந்தால் ஒழிய, நான்கு பேர் பார்க்கும் நிலையில் அவர்கள் அவ்வாறு புரிந்திருப்பதை கண்டுபிடிப்பது “கிட்டதட்ட சாத்தியமற்றது” என்று அஸ்ரி கூறினார்.
“ஆதலால், தனிப்பட்ட பாவங்களை தனிமனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும், இடையில் வைத்திருக்க இஸ்லாம் விரும்புகிறது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தமது மனைவி அல்லாத 52 வயதுடைய ஒரு பெண்ணுடன் நெருக்கமாக (கல்வத்) இருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை, 42 வயதுடைய அஃபெண்டி அவாங் என்பவர் ஒப்புக் கொண்ட பின்னர் அவருக்கு, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை, கோலத் திரெங்கானுவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் 90 பேர் முன்னிலையில் ஆறு பிரம்படிகள் வழங்கப்பட்டன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *