ஒற்றுமை அரசாங்கத்துடன் பொதுத்தேர்தல் வரைதான் அம்னோ! - ஸாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், டிச. 24- ஒற்றுமை அரசாங்கத்துடனான அம்னோவின் ஒத்துழைப்பு அடுத்த பொதுத் தேர்தல் வரைதான் நீடிக்கும் என்று அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கூறியிருக்கின்றார்.அவரின் இந்த அறிக்கை, தனது உறுப்பினர்களை “வேட்டையாடும்" முயற்சிகளுக்கு எதிரான, அம்னோவின் வெளிப்படையான எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

அம்னோவின் உறுப்பினர்களை தன் வசமிழுக்கும் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று, தேசிய முன்னணி தலைவருமான ஸாஹிட் கூறியுள்ளார்."விசுவாசத்திற்கு அம்னோ தலைமைத்துவம் முக்கியத்துவம் வழங்குகிறது” என்று, சிரம்பானில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த நெகிரி செம்பிலான் மாநில அம்னோ கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றியபோது, துணைப் பிரதமருமான ஸாஹிட் தெரிவித்தார்.

ஒரு நிலையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த, தேசிய முன்னணியின் குறிப்பாக அதன் அமைச்சர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.தீர்க்கமான முடிவு ஏதும் இதுவரை காணப்படாவிட்டாலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிகேஆர் கட்சியில் இணைவது குறித்து, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தெங்கு ஸஃப்ருல் அஜிஸ் அக்கட்சியுடன் தொடக்கக் கட்ட பேச்சுக்களை நடத்தி இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஸாஹிட் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவகாரம் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் உறுப்புக் கட்சிகளுக்கிடையில் “சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று, ஓர் அரசியல் ஆய்வாளர் கூறியதாக எஃப்எம்டி நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.இந்நிலையில், நாட்டின் அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திக்க விரும்பவில்லையென்றால், ஓர் அணியாக இருந்து செயல்படுமாறு, தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுக்கு ஸாஹிட் நினைவுறுத்தினார்.

“ஓரணி என்ற உணர்வைக் கொண்டிருக்க வேண்டியிருந்த அதிகமான தலைவர்கள் மத்தியில் அத்தகைய உணர்வு இருந்திருக்க வேண்டும்.ஆனால், பிரச்சினைகள் எழுந்ததால், “சொந்த கோல் கம்பத்துக்குள்ளேயே அவர்கள் கோல்களைப் போட்டனர். இது தேசிய முன்னணி அணி, சொந்த கோல் கம்பத்துக்குள் கோலடிக்காதீர்கள்" என்று எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிடாமல் ஸாஹிட் நினைவுறுத்தினார்.

நாட்டில் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, தேசிய முன்னணியின் கருத்துகளை காது கொடுத்து கேட்குமாறு, எந்த தரப்பையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் ஸாஹிட் கேட்டுக் கொண்டார்.ஒற்றுமை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு குறித்து கருத்துரைத்திருக்கும் தேமு தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இவ்வாறு வலியுறுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளித்த ஸாஹிட், தேசிய முன்னணியின் முதுகெலும்பாக இருக்கும் அம்னோ, அரசியலில் விசுவாசம் மீது மிகுந்த அக்கறையைக் கொண்டிருக்கிறது என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *