வங்காள தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான கொடூரம் கண்டிக்கத்தக்கது!- துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

- Shan Siva
- 24 Dec, 2024
கோலாலம்பூர், டிச 23 : வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
எந்தவொரு உயிரைக் கொல்வதும், கொடுமைப்படுத்துவதும் பாவமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு ஜாலான் பங்சார் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வங்காளதேச இந்துக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு பூஜை கலந்து கொண்டு அவர் இவ்வாறு உரையாற்றினார்.
வங்காள தேசத்தில் வசிக்கும் இந்துக்கள் அந்நாட்டில் பூர்வீக குடிமக்களாவர். அந்நாட்டில் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என்றார் அவர்.
அவர்களின் மத நம்பிக்கையின் காரணமாக அவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், மரணம் விளைவிக்கப்படுவதாகவும் மற்றும் அவர்களின் உடைமைகள் சூறையாடப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கொடூரச் செயல் நமக்கு வேதனையைத் தருவதோடு, இந்தச் செயல் கண்டிக்கத்தக்க ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கொடூரச் செயலை எதிர்த்து அறிக்கை விடுவது மட்டும் தீர்வாகாது. இது ஆறுதலைத் தரலாம் மற்றும் நம்பிக்கையைத் தரலாம். ஆனால் இது ஒரு தீர்வு அல்ல என அவர் சுட்டிக் காட்டினார்.
நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் இதுபோன்ற இன்னல் வரும் போது இறைவனிடம் சரணடைந்தால், ஏதாவது ஓர் உருவில் தோன்றி அநீதி புரிபவர்களுக்கு பாடம் புகட்டி ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறுகிறது. இதை அடிப்படையாக வைத்துதான் தீபாவளி உட்பட பெரும்பாலான நமது இந்து பண்டிகைகள் கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அவ்வகையில் இந்து தர்மம் கற்பிக்கும் அஹிம்சை வழியிலே வங்காளதேச இந்துக்களுக்காக நாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் நடப்பு வங்காளதேச அரசாங்கம் சிறுபான்மை இந்துக்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பிரார்த்தனையில் இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், இந்து வழக்கறிஞர்கள் மன்றம், கோப்பியோ பிரதிநிதிகள் மற்றும் மலேசியாவில் வாழும் வங்காளதேச இந்துக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *