ஏஐ மூலம் தெய்வச் சிலைகளை இழிவுபடுத்துவதா?- துணை அமைச்சர் சரஸ்வதி கண்டனம்!

- Muthu Kumar
- 16 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 16-
நாட்டின் இறையாண்மையையும் மத நல்லிணக்கத்தையும் மாசுபடுத்தும் செயலை எவர் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அவை மிகவும் கண்டிக்கத்தக்க செயல் மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதாகும் என்று ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்துமலை திருத்தலத்தில் உள்ள திருமுருகன் சிலைக்கு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும் என்றார் அவர்.நாட்டின் ருக்குன் நெகாரா கோட்பாட்டை உயிர் மூச்சாகக் கருதும் மலேசிய இந்துக்களின் மனதை இந்தச் செயல் ஆழமாகப் பாதித்துள்ளது.ஒரு மதத்தை இழிவுபடுத்துவதும், அந்த மதத்தின் உருவச் சிலைகள் மீது களங்கத்தை ஏற்படுத்துவதும் நாட்டின் இறையாண்மைக்கு உகந்ததல்ல.
நாட்டை நிர்வகிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இதுபோன்ற பண்பற்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகில் தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப நல்ல வழிகளில் இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது சிறந்த பண்பாகும்.
அதை விடுத்து மனிதத்தையும் தெய்வங்களையும் இழிவுபடுத்தும் எந்தவொரு செயலையும் அரசாங்கம் அனுமதிக்காது என்று துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *