‘சக்தி’ டாக்டர் இராமநாதன் காலமானார்! செவ்வாடை பக்தர்களுக்குப் பேரிழப்பு!

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், மே 27: மலேசிய மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக அறப்பணி இயக்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் இராமநாதன் கணபதி பிள்ளை இன்று காலமானார்.

மலேசியாவில் மேல் மருத்துவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் இன்று நாடு முழுவதும் வேரூன்றக் காரணமாக இருந்தவர் டாக்டர் இராமநாதன்.

மலேசியாவில் பினாங்கு முதல் ஜொகூர் வரை எண்ணற்ற மன்றங்களை அமைத்து, பக்த பெருமக்களுக்கு ஆன்மிக உணர்வுகளையும், அருள்திரு அம்மா பங்காரு அடிகளாரின் மெய் கீர்த்தியையும் பரப்பியவர்.

மலேசிய மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக அறப்பணி இயக்கத்திற்குப் பல்வேறு வகையில் தமது பங்களிப்பைச் செய்து மன்றத்தின் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.

இவரோடு டாக்டர் கந்தையாவும் இணைந்து, சிறப்பாகச் செயல்பட்டு மலேசிய மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக அறப்பணி இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக அடிகளாரின் ஆலோசனையின் பேரில் ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் இவ்வியக்கத்தின் தேசியத் தலைவராகத் தற்போது இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.

இதனை அடுத்து அன்னாரின் இழப்பு இயக்கத்திற்கு மட்டுமல்ல, ஆதிபராசக்தியின் செவ்வாடை பக்தர்கள் அனைவருக்குமே பேரிழப்பு என அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வியக்கத்தின் தற்போதைய தேசியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறுகையில், அன்னாரின் இழப்பு நம் தமிழ்ச் சமூகத்தின் பெரும் சக்தியாய் விளங்கும் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா பங்காரு அடிகளாரின் தொண்டர்களுக்கு பேரிழப்பு என்று தெரிவித்தார்.

பழகுதற்கு இனிமையானவர். மலேசியாவில் அம்மாவின் வழி ஆதிபராசக்தி பேரியக்கத்தைத் தோற்றுவித்து இன்று நாடு முழுவதும் செவ்வாடை பக்தர்களை உருவாக்கி, சிறப்பான ஆன்மிக ஏற்பாடுகள் செய்து வெற்றி கண்டவர் டாக்டர் இராமநாதன் என அவர் புகழாரம் சூட்டினார்.

மக்கள் சுபிட்சமாக இருக்க மகத்தான ஓர் ஆன்மிகப் பாதையை நம் மலேசியத் திருநாட்டில் நிறுவிய, அந்தப் பெருமகனாரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், எல்லாம் வல்ல அம்மாவின் அருளில் அவர் ஆத்மா சாந்தி பெற்று இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும் என்றும் ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

இந்நிலையில் அன்னாரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை, தலைநகரில்  எண் 8, லோரோங் தித்திவங்சா சாத்து, தாமான் தாசே தித்திவங்சா என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு செந்தூல் இந்து மயானத்தில் அன்னாரது நல்லுடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *