அரச உத்தரவு குறித்து பேசுவதற்கு தடைவிதிக்க AGCக்கு அரசு உத்தரவிடவில்லை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜன. 16

நஜிப் ரசாக்கிற்கான வீட்டுக் காவல் அரச உத்தரவு குறித்து விவாதிப்பதிலிருந்து பொதுமக்களை அனுமதிப்பதைத் தடுக்க, நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெறச் சொல்லி அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அரசாங்கம் உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை.

நேற்று புதன்கிழமை நடந்த வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விவகராம் குறித்து பேசப்படவில்லை என்று, அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
"(அமைச்சரவைக் கூட்டத்தில்)" அது குறித்து விவாதிக்கப்படவில்லை. அப்படி ஓர் உத்தரவை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அமைச்சரவை இடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எஞ்சியிருக்கும் சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் இருந்தவாறு கழிக்க அனுமதிக்கும் நஜிப்புக்கு ஆதரவான அரச உத்தரவு குறித்துப்பேச பொதுமக்களுக்குத் தடை விதிப்பதற்காக நீதிமன்ற உத்தரவைப்பெற அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விண்ணப்பம் செய்ய அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து கருத்துரைக்கும்போது ஃபாமி இதனைத் தெரிவித்தார்.

நஜிப் தொடர்பிலான அரச உத்தரவு சம்பந்தப்பட்ட சட்ட சீராய்வு குறித்து கருத்துகளைத் தெரிவிப்பதிலிருந்து பொதுமக்களைத் தடுப்பதற்காக, உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றுக்கு தமது தரப்பு விண்ணப்பம் செய்யும் என்று, கூட்டரசு மூத்த வழக்கறிஞர் ஷம்சுல் பொல்ஹசான் கூறியதாக கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

உணர்ச்சிகரமான விவகாரம் சம்பந்தப்பட்டுள்ளதால், இடைக்கால தடை உத்தரவு கோரி விண்ணப்பம் செய்யப்படும் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு செய்ய விரும்பினால், இம்மாதம் 20ஆம் தேதிக்குள் அதற்கு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்குமாறு நீதிபதி ஹயாதுல் அக்மால் அப்துல் அஜிஸ் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

அந்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்க நஜிப்பிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
வீட்டுக் காவலின் கீழ், எஞ்சியிருக்கும் தமது சிறைத் தண்டனையைக் கழிக்க நஜிப்புக்கு அனுமதியளிக்கும். முந்தைய மாமன்னரினால் வழங்கப்பட்டிருந்த அரச உத்தரவை அமல்படுத்துமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துவதற்கான சட்ட சீராய்வைத் தொடங்க, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இம்மாதம் 6ஆம் தேதி நஜிப்புக்கு அனுமதி அளித்திருந்தது.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் நஜிப்புக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கும் சிறைத் தண்டனைக்கும் முழு மன்னிப்பு வழங்கக் கோரி, மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் முறையீடு செய்யப்படும் என்று, கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார்.

நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை 6 ஆண்டுக்கும் 21 கோடி வெள்ளி அபராதத்தை 5 கோடி வெள்ளிக்கும் கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் கடந்த பிப்ரவரியில் குறைத்திருந்தது. நஜிப் தற்போது காஜாங் சிறைச்சாலையில் தமது சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *