கெடாவை கைப்பற்றுவதைக் காட்டிலும் தொகுதிகளில் வெற்றி பெறுவது முக்கியம்!

- Muthu Kumar
- 18 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 18-
அடுத்த தேர்தலில், கெடா மாநிலத்தைக் கைப்பற்றுவதைக் காட்டிலும், கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெறுவதில் பக்காத்தான் ஹராப்பானும் தேசிய முன்னணியும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மந்திரி பெசார் சனுசி நோர் தலைமையில் தொடர்ந்து வலிமையுடன் இருக்கும், பெரிக்காத்தான் நேஷனல் வசமிருக்கும் கெடாவைக் கைப்பற்றுவதில் தேசிய முன்னணி பக்காத்தான் கூட்டணி இன்னமும் கணிசமான சவால்களை எதிர்நோக்கி இருப்பதாக, வட மலேசியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் நஸ்டி ஒமார் கூறியுள்ளார்.
"சனுசியின் அரசாங்கம் இன்னமும் வலிமையுடனேயே இருக்கிறது. மாநில மக்களும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக, மதில்மேல் பூனையாக இருக்கும் மற்றும் இளம்
வாக்காளர்கள் பெரிக்காத்தான் நேஷனலுடனேயே இணைந்திருக்கின்றனர்” என்று எஃப்எம்டியிடம் அவர் தெரிவித்தார்.
கெடாவைக் கைப்பற்றும் தேமு-பக்காத்தானின் விருப்பம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. 2027ஆம் ஆண்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில், கெடா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் மேலும்' கூடுதலான தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றால் அல்லது ஒட்டு மொத்தமாகவே வெற்றி பெறுமேயானால், அது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவே இருக்கும் என்று ருஸ்டி தெரிவித்தார்.
இதை அடைவதற்காக, மக்கள் சம்பந்தப்பட்ட
தங்களின் நிகழ்ச்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம், கெடா மக்களுடன் தேமு-பக்காத்தான் கூட்டணி மேலும் அணுக்கமான தொடர்பை அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"மேலும் தீவிர அடிமட்ட ரீதியில், கட்சி உறுப்பினர்கள் ஒருவரையொருவர் முழுமையாக ஏற்றுக் கொள்வதை உறுதி செய்வதன் மூலம், தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை தேமு-பக்காத்தான் கூட்டணி அவசியம் வலுப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
இந்நிலையில், கெடா மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்க, தேழு-பக்காத்தான் கூட்டணிக்கு கெடாவில் போதுமான ஆதரவு இல்லை என்று, கெடா அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் சைஃபுல் சைனால் அபிடின் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
"பக்காத்தான் ஹராப்பான் குறிப்பாக ஜசெகவுடனான அம்னோவின் ஒத்துழைப்பை ஏற்றுக் கொள்வதில், கெடாவில் உள்ளஅம்னோ உறுப்பினர்களில் அதிகமானோர் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அம்னோவுக்கான ஆதரவு அண்மையில் சற்று அதிகரித்திருக்கலாம் என்றும் ஆனால், அடுத்த மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாறுபட்ட தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு அந்த வாக்குகள் போதுமானவையாக இருக்காது என்றும் அவர் கூறியிருந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அம்னோ ஒத்துழைப்பை ஏற்படுத்தி இருந்த போதிலும், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் சட்டமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகளே அக்கூட்டணிக்குக் கிடைத்திருந்ததை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.இக்கூட்டணியின் அவசியத்தை அக்கட்சித் தலைவர்கள் அவ்வப்போது அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்” என்று ருஸ்டி குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலுக்குப் பின்னர் கெடாவை ஆட்சி புரிய "காத்திருக்கும் அரசாங்கமாக" தேமு-பக்காத்தான் கூட்டணி தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருவதாக, பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் இஸ்மாயில் இம்மாதம் 11ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் மொத்தம் 33 சட்டமன்றத் தொகுதிகளில், 21இல் பாஸும் 11இல் பெர்சத்துவும் கெராக்கான் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தன. தேசிய முன்னணி ஒன்றில்கூட வெற்றி பெறாத நிலையில், பக்காத்தானின் உறுப்புக் கட்சிகளான பிகேஆர் இரண்டு தொகுதிகளிலும் ஜசெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *