மலேசியாவுக்குச் செல்வத்தைத் தேடவே சீனா செல்ல ஜோ லோவின் சேவையைப் பயன்படுத்தினேன்!

- Muthu Kumar
- 16 Jan, 2025
புத்ராஜெயா, ஜன. 16-
தலைமறைவாக இருக்கும் ஜோ லோ பற்றி பல விசயங்களை தாம் கேள்விப்பட்ட போதிலும், அந்த காலகட்டத்தில் அவை எந்த அளவுக்கு உண்மை என்பது தமக்குத் தெரியாது என்று, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், புத்ராஜெயா உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
விரைவாக மலேசியாவுக்கு செல்வத்தைத் தேடித் தரும் காரணத்திற்காக, ஒரு வர்த்தகரான ஜோ லோ சம்பந்தப்பட்ட 1எம்டிபி ஊழல் குறித்து அறிந்திருந்தும், அக்காலகட்டத்தில் சீனாவுக்குச் செல்ல விருந்த தமது முன்னாள் சிறப்பு அதிகாரி டத்தோ அம்ஹாரி எஃபெண்டி நசாருடினுக்கு உதவுவதற்காக, ஜோ லோவின் உதவியை பயன்படுத்துவதென்று தாம் முடிவு செய்ததாகவும் நஜிப் கூறியுள்ளார்.
1எம்டிபி ஊழல் நிதி மோசடிக்கு மூல காரணம் என்று கூறப்படும் ஜோ லோ குறித்த முழு விவரங்கள் அப்போது தமக்கு தெரியாது என்று, 1எம்டிபி நிதி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிந்து வரும் நஜிப், நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அனைவருக்கும் பலனளிக்கும் என்பதால், ஒரு திட்டம் மூலம் மலேசியாவுக்கு செல்வத்தைத் தேடுவதே தமது நோக்கமாக இருந்தது என்று, அரசு தரப்பு வழக்கறிஞர் அஹ்மாட் அக்ராம் கரிப் கேட்ட ஒரு கேள்விக்கு நஜிப் பதிலளித்தார்.அஹ்மாட்: 2016ஆம் ஆண்டில், 1எம்டிபி குறித்த செய்தி நாடு முழுமையிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
அஹ்மாட்: அனைத்து சம்பவங்களுக்கும் மூளை அல்லது காரணம் என்று கூறப்படும் நபர் ஜோ லோ. அதாவது நல்லவரல்லாத ஒருவர் மற்றும் 1எம்டிபி நிதி ஊழலுக்கு வித்திட்டவர்?
நஜிப்: ஆம். ஆனால், அவரைப் பற்றிய முழு விவரங்கள் எனக்குத் தெரியாது.
அஹ்மாட்: ஜோ லோவைப் பற்றிய கதை மிகவும் பரபரப்பானது, அவர் சில நபர்களுடன் படகில் விருந்து வைக்கும் படங்கள் உள்ளன.
நஜிப்: உண்மை.
அஹ்மாட்: அப்படியென்றால், அம்ஹாரிக்கு உதவுவதற்காக, அப்போது நாட்டை ஏமாற்றியதாக கூறப்படும் ஒருவரான ஜோ லோவை நீங்கள் இன்னமும் தேர்வு செய்திருக்கின்றீர்கள்
நஜிப்: காரணம், சீனாவில் உள்ளவர்களுடன் அவர் தனிப்பட்ட தொடர்பைக் கொண்டிருந்தார். எவ்வளவு சீக்கிரத்தில் நாட்டிற்கு செல்வத்தைத் தேடித்தர முடியும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஆதலால், நாங்கள் அவரைப் பயன்படுத்தினோம். ஆனால், எங்களின் கடன்களுக்குத் தீர்வு காண்பதற்காக அல்ல.
அப்போது ஜோ லோ ஒரு பொய்க்காரனாக அறியப்பட்டிருந்ததாக அஹ்மாட் அக்மால் கூறியபோது நஜிப் அதை ஒப்புக் கொண்ட வேளையில், சீனாவில் ஆராயப்பட்ட திட்டம் நாட்டுக்கு லாபத்தைக் கொண்டு வரும் என்பதற்காக ஜோ லோவின் உதவியை தாம் கோரியதாகத் தெரிவித்தார்.
அது எந்த திட்டம் என்று அஹ்மாட் கேட்டபோது. "இசிஆர்எல் திட்டம்" என்று நஜிப் சுருக்கமாக பதிலளித்தார். நீதிபதி டத்தோ காலின் லோரன்ஸ் செக்குவாரா முன்னிலையில் நடந்து வரும் இவ்வழக்கு விசாரணை இன்றும் தொடருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *