அவிதான் வழக்கு விசாரணை 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன.8-

ஹீப்ரு மொழிபெயர்ப்பாளர் வேண்டும் என்று இஸ்ரேலிய பிரஜை அவிதான் சலோம் வலியுறுத்தியதால், அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று மீண்டும் ஒத்தி வைத்தது.

ஒரு ஹீப்ரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்வதற்காக, சுடும் ஆயுதங்களை கடத்தியது மற்றும் துப்பாக்கி தோட்டாக்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவிதானின் வழக்கு விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு நீதிபதி நோரினா ஸைனோல் அபிடின் ஒத்தி வைத்தார்.

தமக்கு அடிப்படை ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதால், வழக்கு முழுவதிலும் தமக்கு ஒரு ஹீப்ரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுவதாக, 39 வயதுடைய அவிதான் நீதிமன்றத்திடம் தெரிவித்தான்.இந்த கோரிக்கையை எழுப்புவதற்காக ஏன் ஒன்பது மாதங்கள் வரை காத்திருந்தீர்கள் என்று அவிதானிடம் நீதிபதி கேட்டார்.

“கடந்த ஆண்டில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, உங்களால் ஆங்கிலத்தில் பேசமுடிந்ததை அனைவரும் பார்த்ததை இன்னமும் நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். சாதாரண ஆங்கிலத்தில் உங்களால் பேசமுடியும் என்றும் நீதிமன்றத்தில் நீங்களே தெரிவித்திருந்தீர்கள்.

“அப்போதெல்லாம் மொழிபெயர்ப்பாளர் விவகாரம் எழுப்பப்படவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவை என்று நீங்களோ உங்களின் வழக்கறிஞரோ நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்ததும் இல்லை” என்று நீதிபதி நோரினா தெரிவித்தார்.எனினும், தமக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது என்று, தாம் பல முறை தமது வழக்கறிஞரிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்திடம் அவிதான் கூறினான்.

புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழியில் அவர் ஆதாரங்களை வழங்கி இருந்தால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு அவசியம் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் செக்ஷன் 270 தெளிவாக குறிப்பிடுவதாக, அவிதானின் வழக்கறிஞர் நரான் சிங் வாதிட்டார்.

“ஒரு ஹீப்ரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்து, தருவதைவிட வேறு வழி ஏதும் எங்களுக்கு இல்லை. அவருக்கு (அவிதான்) ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்து தரப்படவில்லையென்றால், தற்காப்பு தரப்பு அதில் சமரசம் காணாது” என்று நரான் சிங் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

நரான் சிங்கின் கோரிக்கையை எதிர்க்காத அரசு தரப்பு வழக்கறிஞர் முஹமட் முஸ்தப்பா, இவ்வழக்கில் வழங்கப்பட வேண்டிய பல அறிக்கைகள் தொழில்நுட்ப விதிமுறைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றில் வேதியியல், தடயவியல் மற்றும் சுடும் ஆயுதங்களின் அறிக்கைகளும் அடங்கும் என்றும் தெரிவித்தார்.

முஸ்தப்பாவின் வாதங்களை கேட்ட பின்னர், ஒருவேளை ஹீப்ரு மொழிபெயர்ப்பாளர் கிடைக்காவிட்டால், இவ்வழக்கின் விசாரணை சாதாரண ஆங்கிலத்திலேயே தொடரப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் சாட்சியமளிக்க கிட்டதட்ட 30 சாட்சிகள் அழைக்கப்படவுள்ளனர். இஸ்ரேலின் பினெய்- பிராக் எனுமிடத்தைச் சேர்ந்த அவிதான், ஆறு கைத்துப்பாக்கிகளைக் கடத்தியதாக 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழும் 200 துப்பாக்கி தோட்டாக்களை வைத்திருந்ததாக 1971ஆம் ஆண்டு (தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ள) சுடும் ஆயுதச் சட்டத்தின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளான்.

கடந்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி மாலை 6.46 மணிக்கும் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கும் இடையில், கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஓர் ஓட்டலின் அறையில் அக்குற்றங்களைப் புரிந்ததாக அவிதான் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *