பிகேஆரின் மேல்முறையீடு ஏப்.17 ல் செவிமடுக்கப்படும்!

- Muthu Kumar
- 14 Feb, 2025
புத்ராஜெயா, பிப். 14-
கட்சி தாவிய குற்றத்திற்காக பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஸூராய்டா கமாருடின் ஒரு கோடி வெள்ளியை அக்கட்சிக்கு கட்ட வேண்டியிருந்தது. அத்தொகையை ஒரு லட்சம் வெள்ளியாக மேல்முறையீட்டு நீதிமன்றம் குறைத்துள்ளது. அதனை எதிர்த்து பிகேஆர் செய்துள்ள விண்ணப்பத்தைக் கூட்டரசு நீதிமன்றம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று செவிமடுக்கும்.
காணொளி வாயிலாக அந்த விசாரணை நடைபெறும் என்று அக்கட்சியின் வழக்கறிஞர் நல்பிரீத் சிங் தெரிவித்தார். இவ்வழக்கின்
மேலாண்மையை திங்கள்கிழமையன்று நடத்துவதற்கு துணைப் பதிவாளர் ஹூஸ்னா ஸூல்கிப்ளி நேற்று நாள் குறித்தார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களின் எழுத்துப்பூர்வ வாதத் தொகுப்புகளை ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின்படி பிகேஆர் கட்சிக்கு ஒரு கோடி வெள்ளி இழப்பீடு செலுத்த வேண்டும் எனும் தீர்ப்பை நிலைநிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அக்கட்சி வலியுறுத்துகிறது. அவ்வழக்கின் தகுதிப்பாடுகளை
செவிமடுப்பதற்கு ஏதுவாக கூட்டரசு நீதிமன்றத்திடம் பன்னிரண்டு கேள்விகளையும் அது முன்வைத்துள்ளது.
பிகேஆர் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக அக்கட்சிக்கு ஒரு கோடி வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டுமென்று கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதியன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அக்தார் தாஹிர் உத்தரவிட்டிருந்தார்.ஆனால், ஸூ ராய்டா சமர்ப்பித்திருந்த மேல்முறையீட்டை செவிமடுத்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சீ மீ சூன், பிகேஆருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அவர் மீறியது தவறுதான் என்று குறிப்பிட்டார்.
இருந்த போதிலும், அந்த இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் வெள்ளியாக குறைப்பதாக அறிவித்தார். பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளரான சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அக்கட்சியின் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் அவ்வழக்கைத் தொடுத்தார்.
அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்டு வென்ற ஸுராய்டா அதன் பிறகு பெர்சத்து கட்சிக்குத் தாவினார். இதனால் அக்கட்சிக்கு இழப்பீடாக ஒரு கோடி வெள்ளி இழப்பீடு செலுத்தக் கோரி சைஃபுடின் வழக்குத் தொடர்ந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *