ஆவணமற்றோருக்கு பொது மன்னிப்பு வழங்கும் PRM 2.0 திட்டம்! - உள்துறை அமைச்சர் அறிவிப்பு

- Shan Siva
- 16 May, 2025
கோலாலம்பூர், மே 16: புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பும் திட்டம் 2.0 மீண்டும்
தொடங்குவதன் மூலம், நாட்டில் ஆவணமற்ற நிலையில் இருக்கும் அந்நிய நாட்டினரை
நிர்வகிக்க அரசாங்கம் தனது முயற்சியைத் தொடரும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ
சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்தத் திட்டம்
இந்த ஆண்டு மே 19 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30, 2026 வரை குடிநுழைவுத்
துறையால் தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசுப் பகுதியை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும்
என்று அவர் கூறினார்.
PRM 2.0 எனப்படும் இத்திட்டம் ஆவணமற்ற
புலம்பெயர்ந்தோர் மீது வழக்குத் தொடரப்படாமல், அவரவர் தங்கள்
சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஒரு பொது மன்னிப்பு முயற்சி என்று அவர் விளக்கினார்.
மாறாக, செல்லுபடியாகும் பாஸ் இல்லாமல் மலேசியாவில் நுழைந்தாலோ அல்லது தங்கினாலோ RM500, விசா காலாவதியான பிறகு தங்கினால் RM500 மற்றும் நிபந்தனைகளை மீறினால் RM300 என இத்தகைய
குற்றங்களின் அடிப்படையில் அவர்கள் கூட்டு அபராதங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று
அவர் குடிநுழைவுத் துறையின் 2024 சிறந்த சேவை விருது வழங்கும் விழாவில் செய்தியாளர்
கூட்டத்தில் கூறினார்.
நாடு திரும்பும்
முயற்சிகளின் கீழ் முன்னர் பதிவுசெய்து நாட்டை விட்டு வெளியேறத் தவறிய
நபர்களுக்கும், துறையால் கருப்புப் பட்டியலில்
சேர்க்கப்பட்டவர்களுக்கும், அல்லது தற்போது கைது வாரண்டுகளுக்கு
உட்பட்டவர்களுக்கும் அல்லது அதிகாரிகளால் தேடப்படுபவர்களுக்கும் இந்த திட்டம்
பொருந்தாது என்று சைஃபுதீன் கூறினார்.
மலேசிய
குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்கள் போன்ற சிறப்பு சட்ட அந்தஸ்து உள்ள நபர்கள், குடிநுழைவுத் துறையின் விசா,
பாஸ் மற்றும் அனுமதிப்
பிரிவில் புகாரளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு
தூதரகங்கள், முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு சமூகங்கள்
இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும், இறுதித் தேதிக்கு முன்
கடைசி நிமிட நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே பங்கேற்பதை ஊக்குவிக்கவும் உதவ
வேண்டும் என்றும் சைஃபுதீன் வலியுறுத்தினார்.
இந்த
நடவடிக்கைகள் காவல்துறை, மக்கள் தன்னார்வப் படை (ரேலா), தேசிய பதிவுத் துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் போன்ற பிற அமலாக்க
நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
முதலாளிகள் ஆவணமற்றவர்களைத்
தொடர்ந்து பணியமர்த்தினால் அல்லது தங்குமிடம் அளித்தால் கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் சைஃபுதீன் எச்சரித்தார். ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின்
சட்டவிரோத இருப்பை அகற்றுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் சமரசம் செய்யாது என்பதை
வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு ஆவணமற்ற தொழிலாளிக்கும் முதலாளிமார்களுக்கு 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு பிரம்படிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *