என்னை நீக்கினால் சபாவில் அம்னோ காணாமல் போய்விடும்”- புங் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோத்தாகினபாலு, ஜூன் 28-

இவ்வாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலிலிருந்து தாம் விலகிக் கொள்ள விருப்பதாகக் கூறப்பட்டு வரும் செய்தியை சபா மாநில அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் நிராகரித்துள்ளார்.

மாநில சட்டமன்றத் தேர்தலில் தமது லமாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக் கொள்ளப் போட்டியிட இருப்பதாகக் கூறியுள்ள புங், மாநில முதலமைச்சர் பதவியை அடையும் தமது எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.“நான் போட்டியிடவில்லை என்றால், எப்படி (மாநில) முதலமைச்சராக ஆகுவது?" என்று சிரிப்புக்கு மத்தியில் பேசிய புங், தமது லமாக் தொகுதியை தமது மகனிடம் ஒப்படைக்கப் போவதாகக் கூறப்படுவதையும் நிராகரித்தார்.

“என்னை ஒதுக்கி வைக்க முயற்சி ஏதும் மேற்கொள்ளப்பட்டால், சபாவில் அம்னோ தொடர்ந்து இருக்காது.“என்னை நீங்கள் நீக்கினால், (சபாவில்) அம்னோ மூடப்பட்டு காணாமல் போய்விடும். நான்தான் சபா அம்னோவுக்கு மறுவாழ்வு கொடுத்தேன்” என்று அண்மையில் மெலே மெயில் நாளிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கினாபாத்தாங் நாடாளுமன்ற உறுப்பினருமான புங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் கட்சி படுவீழ்ச்சிக் கண்ட பின்னர், சபாவில் அம்னோ தொடர்ந்து கால் பதித்து வருவதற்காக தாம் மிகக் கடுமையாகப் போராடியதாக, தமது முரட்டுத் தனமான பேச்சுகளினால் அவ்வப்போது சிக்கலில் மாட்டிக் கொள்ளும் புங் தெரிவித்தார்.

“சபா அம்னோவில் சுமார் ஐந்து லட்சத்து 30 ஆயிரம் உறுப்பினர்களை நாங்கள் கொண்டிருந்தோம். ஆனால், 2018ஆம் ஆண்டு நெருக்கடிக்குப் பின்னர் அந்த எண்ணிக்கை 4 லட்சமாக சரிவு கண்டது. ஆனால் இப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 6லட்சத்து 15 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக நான் இதைத்தான் செய்து வந்துள்ளேன்" என்று அந்த நேர்காணலில் புங் தெரிவித்தார்.

தொடக்கத்தில் சபா மாநில அம்னோ தலைவர் பதவி மீது எனக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது. அதை நான் விரும்பவும் இல்லை. ஆனால், தலையீடு எதுவும் இல்லாமல் இருந்தால் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக தாம் நிபந்தனை விதித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

கட்சிக்குள் தாம் கடுமையான எதிர்ப்புகளை எதிர்நோக்கியதாகக் கூறிய அவர், எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் சபா மாநில அம்னோவின் முன்னாள் தலைவரும் தற்போதைய மாநில கவர்னருமான துன் மூசா அமானும் அடங்குவார் என்றார்.மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வரும் டத்தோ ஸ்ரீ ஷாஃபி அப்டாலுடன் தாம் அரசியல் ரீதியில் உறவு வைத்திருந்ததால் பலர் அதிருப்தி அடைந்திருந்த காரணத்தினால் தாம் பல எதிர்ப்புகளை சந்தித்ததாக புங் கூறினார்.

Ketua UMNO Sabah, Bung Moktar menafikan dakwaan tidak akan bertanding dalam PRN Sabah. Beliau menegaskan akan mempertahankan kerusi Lamag dan bercita-cita menjadi Ketua Menteri. Bung turut menolak dakwaan mahu menyerahkan kerusinya kepada anaknya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *