KL - மூன்று மாடி கடையில் தீ! ஒருவர் பலி, 11 பேர் மீட்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 12: இன்று அதிகாலை ஜாலான் துன் எச்.எஸ். லீ சாலையில் உள்ள மூன்று மாடிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 11 பேர் மீட்கப்பட்டனர்.


கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம், அதிகாலை 2.13 மணிக்கு NG999 எண் வழியாக அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது.


ஜாலான் ஹாங் துவா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 45 வீரர்கள், தித்திவங்சா, புடு, செந்தூல் மற்றும் ஸ்ரீ ஹர்த்தாமாஸ் நிலையங்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக செயல்பாட்டுத் தளபதி அஸ்ருல் கைரி அபு பக்கர் ஒரு அறிக்கையில்  கூறினார்.


அதிகாலை 2.25 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 15க்கு 70 சதுர அடி பரப்பளவுள்ள ஒரு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். தரை மற்றும் முதல் தளங்களில் கட்டிடத்தின் சுமார் 50% தீயால் சேதமடைந்திருந்தது.


தீயணைப்பு வீரர்கள் ஒன்பது ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 11 வெளிநாட்டவர்களை மீட்டனர். இருப்பினும், சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்ட மற்றொரு ஆண் இறந்துவிட்டதாக அறிவித்தார் என்று  கூறினார்.


இரண்டாவது மாடியில் சிக்கியிருந்த நான்கு ஆண்களையும், கூரையில் இருந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணையும் தீயணைப்பு வீரர்கள் ஏணிகளைப் பயன்படுத்தி மீட்டதாக அஸ்ருல் கைரி கூறினார்.


காலை 5.10 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு, உயிர் பிழைத்த 11 பேரும் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.


தீ விபத்திற்கான காரணம் மற்றும் இழப்புகளின் அளவு ஆகியவை இன்னும் விசாரணையில் உள்ளன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *