வரும் சனிக்கிழமை மலேசியாவில் மோடி! இந்தியர்களை சந்திக்கிறார்
- Shan Siva
- 05 Feb, 2026
நியூ டெல்லி, பிப் 5: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியாவிற்கு வருகிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
இது பிரதமர் மோடியின் மலேசியாவுக்கான மூன்றாவது விஜயம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது, மோடி இங்குள்ள இந்திய வம்சாவளி சமூகத்தினரையும், தொழில் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.
மேலும், அன்வாரின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, 10-வது இந்தியா–மலேசியா தலைமை நிர்வாகிகள் (CEO) மன்றக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது.
இந்தியா–மலேசியா உறவு பல்துறை கொண்டதும், தொடர்ந்து வளர்ச்சியடைந்தும் வருகிறது. இந்திய பிரதமரின் இந்த வருகை, இரு நாடுகளுக்கிடையிலான முழுமையான இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்வதற்கான முக்கிய வாய்ப்பாக அமையும் என இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள், கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் மற்றும் நிதி தொழில்நுட்பம், ஆற்றல், சுகாதாரம், கல்வி, கலாசாரம், சுற்றுலா மற்றும் மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



