1 MDB குற்றச்சாட்டுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் - நஜிப் கோரிக்கை

- Shan Siva
- 08 Jan, 2025
புத்ரா ஜெயா, ஜன 8: 1எம்டிபி வழக்கில் தம்மீது சுமத்தப்பட்டுள்ள
குற்றங்களைச் சீராய்வு செய்யுமாறு சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்திற்கு
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் அரசுத் தரப்பின் பல முக்கிய வழக்குகள், தனிப்பட்ட வன்மத்தாலும் பகைமையினாலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டவை
என்பதை கடந்த மாதம் 21ஆம் தேதியன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் பகிரங்கமாக
ஒப்புக் கொண்டிருந்தார்.
அதனை நேற்றுச்
சுட்டிக்காட்டிய நஜிப், தம்மீது கொணரப்பட்ட 1எம்டிபி வழக்கும் அவசரகதியிலும் குறைபாடுகளுடனும் கொண்டு வரப்பட்டவைதான்' என்று கூறினார். அரசியல் நோக்கத்தால் என்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அதற்கு நான் பலிகடா ஆகி விட்டேன் என்றார் நஜிப்.
குற்றம்
சுமத்தப்பட்டதில் பல குறைபாடுகள் இருப்பதை பிரதமர் அன்வார் இப்போது ஒப்புக்
கொண்டுள்ளார். அதனைத் திருத்துவதற்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுதந்திரத்துடன் செயல்பட வேண்டிய நீதிமன்றங்களின் வாயிலாக இதனைச்
செய்யக்கூடாது. மாறாக, சட்டத்துறைத்
தலைவரின் அலுவலகம் வாயிலாகத்தான் அந்தக் குறைபாடுகளைக் களைய வேண்டும்
என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
என்னிடமிருந்து
வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்
என்மீது குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்தனர். அக்குற்றச்சாட்டுகளை
விரிவானமுறையில் சீராய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த
விரும்புகிறேன். வன்மத்தோடும் பழிவாங்கும் உணர்ச்சியுடனும் என்மீது
அக்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும்
1எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் செய்தபோது நஜிப் சொன்னார்.
நேற்று வரையில்
மொத்தம் 692 பக்கங்கள் அடங்கிய தற்காப்புச் சாட்சிய அறிக்கையை அவர் வாசித்து
முடித்தார். 1எம்டிபிக்குச் சொந்தமான 228 கோடி வெள்ளியை முறைகேடு செய்ததாக நஜிப்
மீது 25 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு அதிகாரத் துஷ்பிரயோக
குற்றச்சாட்டுகள் ஆகும். எஞ்சிய 21 குற்றச்சாட்டுகள் கள்ளப் பணப் பரிமாற்றம்
செய்யப்பட்டதாகும். நீதிபதி கோலின்
லாரன்ஸ் செகுய்ரா தலைமையில்
நடைபெற்றுவரும் இவ்வழக்கு இன்று பிற்பகலில் மீண்டும் தொடரும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *