பெக்கானில் 3 வாகனங்கள் விபத்துக்குள்ளாகின 2 ஓட்டுநர்கள் மரணம்!

- Muthu Kumar
- 27 Nov, 2024
பெக்கான், நவ.27-
ஜாலான் பெக்கான்- குவாந்தான் சாலையின் 3ஆவது கி.மீட்டரில் நிகழ்ந்த 3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்றில் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் செபெக்கான் ஜெயாவைச் சேர்ந்த மிட்சுபிஷி திரிதோன் 4 சக்கர வாகன ஓட்டுநர் அஸுவான்ஸனால் அபிடின், (வயது 34) பெக்கான் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்ததாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்பி முகமட் ஸைடி மாட் ஸின் தெரிவித்தார்.
இதில் புரோட்டோன் சாகாவை ஓட்டி வந்த தாமான் ஸ்ரீ மௌலானாவைச் சேர்ந்த ராஜா முஸ்தபா ஷா ராஜா ஜாலில் ஷா, (வயது 71) என்பவர் அதே மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.அதே சமயம் எம்பிவி தொயோத்தா அவான்ஸா காரை ஓட்டி வந்த 26 வயதுடைய ஆடவர் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து மேற்கொண்ட தொடக்கக்கட்ட விசாரணைப்படி மிட்சுபிஷி திரிதோன் ஓட்டிவந்த வணிகர் பெக்கானிலிருந்து குவாந்தானுக்குச் சென்று கொண்டிருந்தார். இதர 2 வாகனங்களும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தன.சம்பவ இடத்திற்கு வந்ததும் அந்த 4 சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு எதிர் திசையில் நுழைந்து முதியவர் ஓட்டி வந்த புரோட்டோன் சாகா காரை மோதியது.
இதில் சம்பந்தப்படாத ஒரு கார் தவிர்க்க முடியாதக் காரணத்தால் புரோட்டோன் சாகா காரின் பின்புறத்தில் மோதியது.இதனால் கடுமையாகக் காயமுற்ற 2 ஓட்டுநர்கள் பெக்கான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு முன்பு உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம், 411ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுவதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது எஸ்பி முகமட் ஸைடி மாட் ஸின் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *