கோலாலம்பூர், ஏப். 12-
சமீபத்தில் பிலிப்பைன்ஸுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் 3 லட்சத்து 29 ஆயிரம் பேரல் டீசல் மலேசியாவில் இருந்து அல்ல என தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் (எம்.டி.இ.என்.) உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச ஊடகங்களில் வெளியாகிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் யூகங்கள் அல்லது ஊகக் கருத்துகளை பரப்ப வேண்டாம் என்றும், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே நம்புமாறும் மன்றத்தின் நெருக்கடி மேலாண்மை குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னர், உலக சந்தையில் நிலவும் மாற்றங்களால் ஏற்பட்ட எரிபொருள் விநியோக அச்சத்தை சமாளிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் தனது உள்நாட்டு எரிபொருள் கையிருப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தச் செய்தியில், மலேசியாவில் இருந்து சுமார் 3 லட்சத்து 29 ஆயிரம் பேரல் அல்லது 52.311 மில்லியன் லிட்டர் டீசல் பிலிப்பைன்ஸுக்கு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், கடந்த மார்ச் 26ஆம் தேதி ஜப்பானிலிருந்து 1 லட்சத்து 42 ஆயிரம் பேரல் அல்லது 22.578 மில்லியன் லிட்டர் டீசல் பிலிப்பைன்ஸுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இவ்விவகாரத்தில் பரவி வரும் தகவல்கள் உண்மையற்றவை என்றும், குறிப்பிடப்பட்ட டீசல் கப்பல் சரக்குகள் மலேசியாவைச் சார்ந்தவை அல்ல என்றும் எம்.டி.இ.என். தெளிவுபடுத்தியுள்ளது.
இதனால், மலேசியாவின் எரிபொருள் விநியோகம் அல்லது ஏற்றுமதி தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.