3.8 கோடி வெளிநாட்டினர் கடந்தாண்டில் மலேசியாவுக்கு வருகை புரிந்தனர்!

- Muthu Kumar
- 31 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 31-
கடந்தாண்டு அதிகமான வெளிநாட்டினர் வருகை மேற்கொண்ட ஆசியான் நாடு எனும் பெருமையை மலேசியா பெற்றுள்ளது. அக்காலகட்டத்தில் மலேசியாவுக்கு மொத்தம் மூன்று கோடியே எண்பது லட்சம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் வருகை மேற்கொண்டனர். தாய்லாந்துக்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.
கடந்த ஓராண்டில் மட்டும் மலேசியாவுக்கு மூன்று கோடியே எண்பது லட்சம் வெளிநாட்டினர் வருகை மேற்கொண்டனர். முன்பு கணிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட இது மிக அதிகமாகும் என்று சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் பஸகுறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டில் இரண்டு கோடியே எழுபத்து மூன்று லட்சம் சுற்றுப்பயணிகள்
நாட்டுக்கு வருவார்கள் என கணிக்கப்பட்டு இருந்தது. அதைவிட அதிகமான எண்ணிக்கையில் அவர்கள் வந்துள்ளனர். இதனால், 2026ஆம் ஆண்டுக்கான எங்களின் கணிப்பை சீராய்வு செய்யவிருக்கிறோம் என்று அறிக்கையொன்றில் தியோங் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறையின் வாயிலாக நாட்டுக்குக் கூடுதல் பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் வகையில் சாத்தியப்பூர்வமான இலக்குகளை நிர்ணயிக்க சுற்றுலா அமைச்சு விரும்புகிறது. சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே நேரத்தில், சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தை குறைந்தப்பட்சம் 15,000 கோடி வெள்ளியாக அதிகரிப்பதற்கும் அது நோக்கம் கொண்டுள்ளது என்றார் தியோங்.
கடந்த 2024ஆம் ஆண்டில் தாய்லாந்துக்கு மூன்று கோடியே ஐம்பத்தைந்து லட்சம் அனைத்துலக சுற்றுப்பயணிகள் வருகை மேற்கொண்டனர். முதலிடத்தை மலேசியா பெற்ற வேளையில், தாய்லாந்துக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. ஆயினும், உலகில் அதிகமானோரை ஈர்க்கும் நகரங்களில் பேங்காக் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அப்பட்டியலில் கோலாலம்பூர் பத்தாவது இடத்தில் உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *