தீ விபத்தில் 3 வீடுகளும் 1 பள்ளியும் சேதமுற்றன!

- Muthu Kumar
- 17 Feb, 2025
தாப்பா, பிப்.17-
ஜாலான் பகாங், கம்போங் பகாங்கிலுள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் 3 வீடுகளும் 1 பள்ளியும் சேதமுற்றன.நேற்று நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் காலை 6.05 மணிக்கு அழைப்பு வந்ததில் தாப்பா மற்றும் பீடோர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேரா மாநிலத் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவுத் துணை இயக்குனர் சபாரொட்சி நோர் அகமட் தெரிவித்தார்.
தீ ஓர் இரட்டை மாடி வீட்டில் ஆரம்பித்து வீட்டின் 60 விழுக்காட்டுப் பகுதி சேதமுற்றதில் அங்கு வெடிப்பு ஏற்பட்டது.அதனால் 3 வீடுகள், 1 பள்ளிக்கூடம் மற்றும் 1பெரோடுவா மைவி கார் ஆகியவை பாதிப்படைந்தன.இருந்த போதிலும் இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட வீடுகளின் கூரைகள், ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன.அருகிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கூரைகளும் கண்ணாடிகளும் உடைந்தன.பள்ளியின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரோடுவா மைவி காரின் பின்புற கண்ணாடி உடைந்தது.
4 தீயணைப்பு இயந்திரங்களில் வந்த 14 தீயணைப்பு வீரர்களால் காலை 8.45 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாக ஓர் அறிக்கையில் சபாரொட்சி நோர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *