சைட் சாடிக்கிற்கு 7ஆண்டுகள் சிறை, 2 பிரம்படிகள் மிகையான ஒரு தண்டனை அல்ல!
- Muthu Kumar
- 30 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 30-
நம்பிக்கை மோசடிக் குற்றத்திற்காகவும் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றத்திற்காகவும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானுக்கு விதிக்கப்பட்ட ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் மிகையான ஒரு தண்டனை அல்ல என்று உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
சைட் சாடிக்கிற்கு நீதிமன்றம் தண்டனை விதிக்கையில் அவர் ஒரு பொதுப் பிரமுகர் என்பதையும் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணத் தலைவராக விளங்குகிறார் என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது என்று நீதிபதி அஸார் அப்துல் ஹமீட் குறிப்பிட்டார்.
அவ்வேளையில், அவருக்கு ஒரு கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் முறையீடு செய்துள்ளார். ஜனவரி 16ஆம் தேதியன்று அந்த விண்ணப்பம் மீதான விசாரணை நடைபெறும்.
கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதியன்று சைட் சாடிக்கிற்கு விதிக்கப்பட்ட ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும்,இரண்டு பிரம்படிகளும் மிதமிஞ்சிய ஒரு தண்டனையாக நீதிமன்றம் கருதவில்லை என்று அத்தீர்ப்புக்கான இருபத்திரண்டு பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுப் பேசியபோது நீதிபதி அஸார் கூறினார்.
பெர்சத்து கட்சியினுடைய இளைஞர் பகுதியின் முன்னாள் தலைவரான சைட் சாடிக்கிற்கு கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதியன்று அத்தண்டனை விதிக்கப்பட்டது. இளைஞர் பகுதிக்குச் சொந்தமான பத்து லட்சம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்தது. ஒரு லட்சத்து இருபதாயிரம் வெள்ளி மதிப்புடைய சொத்துகளைக் கையாடியது. ஒரு லட்சம் வெள்ளியை பெர்சத்துவின் இளைஞர் பகுதியின் நிறுவனமொன்றிலிருந்து தமது சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு அத்தண்டனை விதிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



