ஆன்மிகமும், அறிவியலும் இணையும் 8 ரகசியங்கள்
- Tamil Malar (Reporter)
- 06 Jan, 2026
ஆக்கம் - லட்சுமி சுப்ரமணியம்
பழங்கால பாரம்பரியமான பழக்க வழக்கங்களில் சில மத நம்பிக்கை மற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் மட்டும் உருவானதல்ல, விஞ்ஞானம், உடல் நலம் மற்றும் மனித உளவியல் போன்றவற்றையும் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இன்று நாம் பின்பற்றிவரும் எட்டு வகையான பழக்க வழக்கங்கள், ஆன்மிகம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய இரண்டும் இணைந்தே செயலாற்றுகின்றன என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. அது எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. கோயில் மணி: நாம் கோயிலுக்குச் செல்லும்போது, உள்ளே நுழைந்ததும் முதலில் தென்படுவது கோயில் மணி. இதை ஒரு கையால் அடித்து ஒலி எழுப்பிய பின்பே, மேற்கொண்டு முன்னேறிச் செல்கிறோம். கோயில் மணி, அதிக சக்தி வாய்ந்த 528 Hz அதிர்வெண்களுடன் ஒத்தியைந்திருக்கும்படி சுரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வெளிப்படும் மாய ஒலி, நம் மனது தெளிவு பெறவும், மூளையின் அதிர்வலைகள் ஒத்திசைந்து செயல்பட்டு நம் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவி புரிகின்றன. விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும்போது இந்த அதிர்வலைகள் மூளையின் செவிப்புலப் புறணியை (auditory cortex) ஊக்குவித்து, மனதின் கவனச் சிதறலை கட்டுப்படுத்தி வைக்கிறது. இந்த முறை, ஓர் ஒலி சிகிச்சை போல் செயலாற்றி, பிரார்த்தனைக்கு முன் மனம் அமைதி பெற்று முழு கவனமும் இறைவனை நோக்கிச் செல்ல உதவுகிறது.
2. நெற்றியில் திலகமிடுதல்:
நம் நெற்றியில் இரண்டு புருவங்களுக்குமிடையே திலகமிடுதல் ‘மூன்றாவது கண்’ எனப்படும் அஜ்னா சக்ராவின் செயல்பாடுகளை தூண்டுவதற்கு உதவும். உடலிலுள்ள ஆறாவது ஆற்றல் மையமான அஜ்னா சக்ரா, உள்ளுணர்வு, ஞானம், உத்வேகம் மற்றும் மனத் தெளிவு ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த இடத்தில் மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை வைக்கும்போது, சருமம் குளிர்ச்சி பெறும், ஸ்ட்ரெஸ் நீங்கும், தலைவலி போன்ற அசௌகரியங்களும் நீங்கும். அந்த இடம் ஒரு அகுபஞ்சர் புள்ளியாய் செயல்படுகிறது.
3. ஓம்’ என்ற மந்திரம்: ‘ஓம்’ என்ற மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிக்கையில், யுனிவர்சல் ஃபிரிகுவன்சி எனப்படும் 432 Hzல் அதிர்வலைகள் உற்பத்தியாகின்றன. இவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும் ஆழ்மனது அமைதி பெறவும் உதவி புரிகின்றன. தாள நயத்துடன் இந்த மந்திரத்தை ஓதுவது மூளையின் அலையோட்டத்தை குறைக்கவும், சீரான சுவாசத்திற்கும், கூர்நோக்கும் திறன் கூடவும் உதவும் என விஞ்ஞானம் கூறுகிறது. தனி நபர் சக்தியை அண்ட அதிர்வுகளுடன் ஒத்திசைந்து இயங்கவும் ஓம்கார மந்திரம் உதவுகிறது. உடல், மனம், ஆன்மா போன்ற அனைத்திற்கும் ஊக்கமளிப்பது இந்த மஹா மந்திரம்.
4. கிழக்கு பக்கம் தலை வைத்துப் படுத்தல்: வாஸ்து படி கிழக்கு அல்லது தெற்கு பக்கம் தலை வைத்துப் படுப்பது பூமியின் காந்த ஈர்ப்பு சக்தியுடன் உடல் ஒருங்கமைக்கப்பட்டு, நல்ல தூக்கம் கிடைக்கவும், மூளை சிறந்த முறையில் செயல்படவும் வழியாகும்
5. மஞ்சள் (Turmeric): மஞ்சளில் குர்குமின் என்றொரு கூட்டுப்பொருள் அதிகம் உள்ளது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் கொண்டது. மஞ்சள், சமையலிலும், பல வகையான ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பிலும் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கங்களைக் குறைக்கவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்களை குணமாக்கவும் உதவுகிறது. இதை விஞ்ஞானமும் ஆமோதிக்கிறது.
6. கைகளினால் உணவு உட்கொள்ளல்: உணவை கையிலெடுத்து வாய்க்குக் கொண்டு செல்லும்போது விரல் நரம்புகள், இரைப்பையை ஜீரண செயல்பாட்டிற்கு தயாராகும்படி கட்டளையிட, மூளைக்கு செய்தி அனுப்புகின்றன. இவ்வாறான உணர்வுபூர்வமான தொடர்பு, உணவின் தரத்தை உயர்த்தி, ஆன்மிக உணர்வு உற்பத்தியாகவும் உதவும்.
7. வயதில் மூத்தவர்களின் காலைத் தொட்டு வணங்குதல்: குடும்பத்திலுள்ள இளைய தலைமுறையினர் விசேஷ தினங்களில் பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்குவது பழங்காலம்தொட்டு இருந்துவரும் பழக்கம். இது வணங்குபவரின் மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகமாக செல்ல உதவும். மேலும், மூத்தவர்களிடமிருந்து ஆசிகளையும் நேர்மறை சக்தியையும் பெற்றுத்தரும்.
8. ஏகாதசி விரதமிருத்தல்: தானிய உணவுகளை முற்றிலும் தவிர்த்து ஏகாதசி விரதமிருப்பது, உடலின் நச்சுக்கள் நீங்கி உடல் சுத்தம் பெற உதவும். இதையே தற்காலத்தில், ‘இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்’ என்கின்றனர். இதுவும், இரைப்பை குடல் உறுப்புகள் ஓய்வெடுக்கவும், உடல் எடை குறையவும் உதவுகிறது. உடல், மனம் ஆகிய இரண்டையும் தூய்மைப்படுத்த உதவும் ஓர் ஆரோக்கியமான பழக்கம் இது என நம் முன்னோர்களும் தற்கால கண்டுபிடிப்புகளும் ஒன்றுபோல் அறிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



