முகநூல்,டிக்டாக்,வாட்சாப்,டெலிகிராம் செயலிகள் மோசடிகளுக்கான தளங்களாகும்!

top-news
FREE WEBSITE AD

தும்பாட், ஜன. 21-

இணையம் மூலம் மோசடிச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வரும் நான்கு முக்கிய "தளங்களாக முகநூல், டிக் டாக், வாட்சாப் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைத் தளங்கள் இருந்து வருவது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நான்கு இணையத் தளங்கள் மூலம் கோடிக் கணக்கில் பண மோசடிகள் நிகழ்ந்திருப்பதாக, தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்."கடந்த 2023ஆம் ஆண்டில் முகநூல் மூலம் நிகழ்ந்திருக்கும் மோசடிச் சம்பவங்களினால் ஏற்பட்டுள்ள இழப்பின் தொகை 50 கோடி வெள்ளியை எட்டி இருக்கிறது. அண்மைய தகவல்கள் இன்னும் கிடைக்காத நிலையில், இதுவரையில் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பின் அளவு மிகப் பெரிய அளவில் இருக்கிறது.

வர்த்தகக் குற்றச் செயல் விசாரணைப் பிரிவின் தகவல்கள்படி, சமூக வலைத்தளங்களில் கிட்டதட்ட 14 வகையான ஏமாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதைத் தவிர்த்து, தொலைபேசி அழைப்புகள் மற்றும் நேரடியான சந்திப்புகள் மூலமும் மோசடிக் குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன" என்று. திரெங்கானு, தும்பாட்டில் நேற்று திங்கள்கிழமை ஃபாமி தெரிவித்தார்.

அதிகமானோரை மிகச் சுலபமாக கவர்ந்துவிட கூடிய நிலை இருப்பதால்,மோசடிக்காரர்கள் முகநூல், டிக் டோக், வாட்சாப், டெலிகிராம் ஆகிய சமூக வலைத் தளங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, அத்தகைய மோசடிகள் குறித்த விழிப்புணர்ச்சி பிரச்சாரங்கள் விரைவில் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட விருப்பதாகவும், தொடக்கமாக அது பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் என்றும், ஃபாமி கூறினார்.

“மோசடிக்காரர்களின் வலையில் வீழ்ந்து விடாமல் இருப்பதற்காகவும் சமூக வலைத் தளங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்த தகவல்களை மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் தெரிவிக்கும் நோக்கத்திலும் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட விருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *