மதுரை- அபுதாபி விமான சேவை -'ஜிகர்தண்டா கேட்காதீங்க.' தமிழில் பேசிய பைலட் !

- Muthu Kumar
- 15 Jun, 2025
மதுரை, ஜூன் 14:
இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ (Indigo) நிறுவனம், மதுரையிலிருந்து (Madurai) அபுதாபிக்கு நேரடி விமான சேவையை ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
இந்த சேவை நேரடியாக மதுரையில் இருந்து அபுதாபிக்கு (Abu Dhabi) செயல்படும் விமான சேவையாகும். இந்த சேவை திங்கள், புதன், வெள்ளிக்கிழமை என வாரத்தில் மூன்று முறை நடைபெறவுள்ளது. முதல் விமான சேவையை மதுரையைச் சேர்ந்த இமானுவேல் என்ற பைலைட் இயக்கியுள்ளார். இந்த நிலையில் பைலட் இமானுவேல் பயணிகளுடன் தமிழில் பேசும் வீடியோவை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பைலட் இமானுவேல் தமிழில் பேசும் வீடியோவைப் பகிர்ந்து, மதுரையிலிருந்து அபுதாபிக்கு இயக்கப்பட்ட முதல் விமானத்தை இயக்கிய விமானி மதுரையைச் சேர்ந்த இமானுவேல் என்பது மதுரைக்கு பெருமை. வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் பலரும் பைலட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பைலட் இமானுவேல் பேசியதாவது, இன்னும் 5 நிமிடங்களில் கதவை சாத்திவிட்டு கிளம்பிடுவோம். 4 மணி நேரத்ததில் அபுதாபி சென்று விடலாம். மேலும் பயணம் தூரம் 3000 கி.மீ. பயணத்தை என்ஜாய் பண்ணுங்க. நம்ம ஊர் ஃபிளைட்னு ஜிகர்தண்டா, பருத்திப்பால் எல்லாம் கேட்காதீங்க. கிடைக்காது.என்றார். இதனையடுத்து அவருக்கு கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய பயணி ஒருவர், முதல் விமானத்தை மதுரை மண்ணை சேர்ந்த நீங்கள் ஓட்டுவது பெருமையாக இருக்கிறது. நன்றி என்றார்.
இன்டிகோவின் 6E1513 என்ற விமானம் மதுரையிலிருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு, அபுதாபியில் மாலை 5.20 மணிக்கு சென்று சேரும். அதேபோல், 6E1514 என்ற விமானம் அபுதாபியில் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, மதுரையில் மதியம் 1.50 மணிக்கு வந்து சேரும். தற்போதைய விமான டிக்கெட் விலை சுமார் ரூ. 12,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சர்வதேச சேவையை, தொழில்துறையினர் மற்றும் வர்த்தக சங்கங்கள் வரவேற்றுள்ளன. தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் இன்டஸ்ட்ரி தலைவர் என். ஜெகதேசன், இது தென் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் நன்மை தரும் என்று தெரிவித்தார்.
இன்டிகோ அதிகாரிகள் கூறுவதாவது, "தினமும் சுமார் 50 பயணிகள் மதுரையிலிருந்து சென்னை சென்று, அங்கிருந்து அபுதாபிக்கு இணைப்புச் சேவையை பயன்படுத்தி வந்தனர். இப்போது அந்த தேவையை நேரடியாக இந்த சேவையால் பூர்த்தி செய்ய முடிகிறது" எனக் கூறினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *