பிகேஆரில் சேருவது குறித்து அம்னோவிடம் ஸஃப்ருல் இதுவரை தெரிவிக்கவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 15-

பிகேஆர் கட்சியில் சேருவதற்காக அம்னோவை விட்டு வெளியேறும் தமது திட்டம் குறித்து, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தெங்கு ஸஃப்ருல் அஜிசிடமிருந்து தாம் எந்த ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பெறவில்லை என்று, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார். "இது வரையில், கட்சியை விட்டு விலகப் போவது குறித்த எந்த ஒரு கோரிக்கையும் அவரிடமிருந்து (தெங்கு ஸஃப்ருல்) வரவில்லை. அவரை நான் இன்னும் சந்திக்கவில்லை."ஆதலால், இந்த செய்தியை எங்களால் உறுதிப்படுத்த முடியாது என்று, கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது ஸாஹிட் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு முடிவுடன், பிகேஆர் கட்சியில் சேர்வது குறித்து தெங்கு ஸஃப்ருல் தற்போது பேச்சுக்களை நடந்தி வருவதாக, எஃப்எம்டி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், தெங்கு ஸஃப்ருல் விவகாரம் தொடர்பிலான தகவல்கள் ஏதும் தம்மிடம் இல்லை என்றும் பிகேஆரில் இணைய விரும்புவோர் யாராக இருந்தாலும் அவசியம் இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பிகேஆர் தலைமைச் செயலாளர் ஃபுஸியா சாலே வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

பிகேஆரில் இணைய விருப்பம் கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும், கட்சியில் இணைவது தொடர்பிலான வழிகாட்டி நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்த அவர் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான தெங்கு ஸஃப்ருலுக்கும் இது பொருந்தும் என்றார்.

தங்கள் மீதான நம்பகத்தன்மையை நிலைநாட்டுமாறும் சுயநலன்களுக்காக முன்வைக்கப்படும் சலுகைகளில் மதிமயங்கிவிட வேண்டாம் என்றும் அம்னோ உறுப்பினர்களுக்கு ஸாஹிட் நினைவுறுத்தினார்.அதோடு, ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் உறுப்புக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள் கட்சிகளில் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று, ஒற்றுமைக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுக்கு தேசிய முன்னணி தலைவருமான ஸாஹிட் அறிவுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *