525 பக்க சாட்சிய அறிக்கையை வாசிக்க நஜிப்புக்கு அனுமதி!

- Muthu Kumar
- 03 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 3-
1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த இருநூற்று இருபத்தெட்டுக் கோடி வெள்ளி ஊழல் தொடர்பான வழக்கில் முதல் சாட்சியாக டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் நேற்று உயர்நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
ஐந்நூற்று இருபத்தைந்து பக்கங்கள் கொண்ட சாட்சிய அறிக்கையை நீதிமன்றத்தில் வாசிக்க தமது கட்சிக்காரர் அனுமதி கேட்டுள்ளார் என்று நஜிப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுய்ராவிடம் தெரிவித்தார்.
சாட்சிய அறிக்கை மிக நீளமாக இருந்ததால் அது இரண்டு தொகுப்புகளாகப் தயாரிக்கப்பட்டுள்ளது.சாட்சிய அறிக்கையை படிக்காவிட்டால், தமது மனத்தில் அது பதியாது என்று கட்சிக்காரர் நஜிப் என்னிடம் தெரிவித்துள்ளார் என்று ஷாபி தெரிவித்தார்.சாட்சிய அறிக்கையை நீதிமன்றத்தில் வாசிக்க முடியும் அல்லது அது வாசிக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.
நஜிப்பை எதிர்வாதம் செய்ய அக்டோபர் 30ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, சாட்சிய அறிக்கையைத் தயார் செய்ய ஒரு மாத காலம் மட்டுமே எங்களின் தற்காப்புத் தரப்புக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது என்று ஷாபி சொன்னார். ஷாபியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி செகுய்ரா, முதல் சாட்சியான நஜிப்பை சாட்சிய அறிக்கையை வாசிக்க அனுமதித்தார். அதே நேரத்தில், அந்த அறிக்கையை விரைவாக வாசித்து முடிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
என்னுடைய கட்சிக்காரர் (நஜிப்) மிகச் சிறந்த சொற்பொழிவாளர். ஆனாலும், அவர் தம்மால் இயன்ற வேகத்தில்தான் அவரால் படிக்க முடியும் என்று ஷாபி சொன்னார். அதனைத் தொடர்ந்து, நஜிப் அந்த அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார்.1எம்டிபி நிதியிலிருந்து 228கோடி வெள்ளியை மோசடி செய்ததாக நஜிப் மீது நான்கு அதிகாரத் துஷ்பிரயோக குற்றங்களும் இருபத்தோரு கள்ளப்பணப் பரிமாற்றக் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *