அந்த நன்கொடைக் கடிதங்கள் சவூதி மன்னர் அனுப்பியவை நீதிமன்றத்தில் நஜிப் சாட்சியம்!

- Muthu Kumar
- 23 Jan, 2025
புத்ராஜெயா, ஜன. 23-
நன்கொடை தொடர்பில் சவூதி அரேபியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்கள் உண்மையானவை என கருதியதால் அது குறித்து விசாரிக்க ஆராயவில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். கடிதங்களை என்னுடைய முதன்மைத் தனிச் செயலாளராக இருந்த டத்தோ அஸ்லின் அலியாஸ் பெற்றுக் கொண்டார். அக்கடிதங்கள் உண்மையானவைதானா என்பதை அவரிடம் விசாரிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான 230 கோடி வெள்ளியை முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் எழுபத்தோரு வயதான நஜிப் தற்போது சாட்சியம் அளித்து வருகிறார். அவ்வழக்கில் நஜிப்பை அவரின் வழக்கறிஞர் வான் அஸ்வான் அய்மான் வான் ஃபக்ருடின் நேற்று மறுவிசாரணை செய்தார்.
சம்பந்தப்பட்ட அப்பணம் சவூதி மன்னர் அப்துல்லாவிடமிருந்து வந்ததல்ல என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். பணம் கொடுத்த மன்னருக்கு நீங்கள் நன்றி தெரிவிக்காமல் இருப்பதால் அவர்கள் இந்த சந்தேகத்தை எழுப்புகின்றனர். இது பற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று நஜிப்பிடம் வான் அஸ்வான் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த நஜிப், நன்றி தெரிவிப்பதற்கு பல வழிகள் உள்ளன. சிலர் கடிதம் மூலம் நன்றி தெரிவிப்பார்கள். வேறு சிலர் தனிப்பட்ட முறையில் தொடர்பு
கொண்டு தெரிவிப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், கடிதம் எதனையும் எழுதாமல் நேரடியாகவே அவருக்கு நன்றி கூறினேன் என்றார்.மேலும், அத்தகைய கடிதங்கள் தவறான நபர்களின் கைகளில் எளிதில் கிடைக்க நேரிடலாம். இதுபோன்ற விவகாரத்தில் ரகசியத்தைக் காக்க வேண்டியது மிக அவசியமாகும் என்றார் நஜிப்.
அவ்வழக்கில் நஜிப் தற்போது தற்காப்பு வாதம் புரிந்து வருகிறார். 228 கோடி வெள்ளியைக் கையாடியதாக அவர் மீது மொத்தம் 25 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. தம்முடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட அந்தப் பெருந்தொகை காலஞ்சென்ற மன்னர் அப்துல்லாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்று நஜிப் கூறிவருகிறார்.
உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுய்ரா முன்னிலையில் நடைபெற்று வரும் இவ்வழக்கு இன்றும் தொடரும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *