நஜிப் ஆதரவு பேரணியிலிருந்து பக்காத்தான் ஒதுங்கியிருக்கும்!

- Muthu Kumar
- 04 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 4-
வரும் திங்கள்கிழமை புத்ராஜெயாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் ஆதரவு பேரணியில் சம்பந்தப்படாமல், தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஒதுங்கியே இருக்கும் என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
"அப்பேரணி குறித்து தேசிய முன்னணி தலைவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்" என்று, துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியை குறிப்பிட்டு, செய்தியாளர்களிடம் அன்வார் தெரிவித்தார்.
"பக்காத்தான் ஹராப்பான் சம்பந்தப்படவில்லை” என்று, நான்கு அரசியல் கட்சிகள் பங்கேற்க விருப்பதாகக் கூறப்படும், வரும் திங்கள்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அப்பேரணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அன்வார் நேற்று வெள்ளிக்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.
நஜிப்புக்கு வீட்டுக் காவல் உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து நீதித்துறை சீராய்வு தொடங்கப்பட வேண்டும் என்று கோரும் நஜிப்பின் மேல்முறையீடு மீது அப்பேரணி கவனம் செலுத்தும் என்று, ஓர் அறிக்கையில் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
திங்கள்கிழமை காலை 9 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபடுவதுடன் உரைகளை ஆற்றுமாறும் கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார். அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கிய, நஜிப்பின் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்ட பஸ்களில் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் நஜிப்புக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மன்னிப்பு வாரியம் அத்தண்டனை காலத்தை ஆறு ஆண்டுகளாக குறைத்திருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *