மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பீர்!

- Muthu Kumar
- 21 Dec, 2024
கோலாலம்பூர், டிச.21-
பல மாணவர்களுக்கு நிர்வாண புகைப் படங்களை அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்படும் ஒரு பேராசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, மலாயாப் பல்கலைக் கழகத்தை, அதன் பெண் மாணவிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கின்றது.இதன் தொடர்பில் மலாயாப் பல்கலைக் கழக ஒருமைப்பாட்டுப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒரு மகஜரில் அச்சங்கம் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.
பாலியல் தொந்தரவைத் துடைத் தொழிக்கும் பொறுப்பை அப்பல்கலைக் கழகம் கொண்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவர் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, இந்த விவகாரம் மீது ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பது அப்பல்கலைக் கழகத்தின் பொறுப்பு என்று, அச்சங்கத் தலைவி சின் ஜெஸ் வெங் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பேராசிரியர் உடனடியாக இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் மற்றும் அவரின் இத்தகைய செயல் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உட்பட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பது தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்புக் கொள்கையை மேம்படுத்துவதற்காக, தனது பாலியல் துன்புறுத்தல் கொள்கைகளில் நிலவும் பலவீனங்களை அப்பல்கலைக்கழகம் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும், சங்கம் சார்பாக அவர் முன்வைத்துள்ளார்.
"தெளிவான கொள்கைகளுக்கான அவசியம் நிலவுகிறது. சிறந்த மாணவர் விழிப்புணர்ச்சி மற்றும் ஒரு பாதுகாப்பான வளாகத்தை உருவாக்க விரைவான நடவடிக்கை தேவை என கேட்டுக் கொண்ட அவர், பல்கலைக் கழகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்ப்பில் பெண் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 60.4 விழுக்காடாக இருந்தது என்றார்.
பல மாணவர்களுடன் நிர்வாண புகைப் படங்களை பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பேராசிரியர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒரு புகார் பெறப்பட்டிருப்பதை மலாயாப் பல்கலைக் கழகம் இதற்கு முன்னர் உறுதிப்படுத்தி இருந்தது.விசாரணைக்காக அந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அது கூறியிருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *