கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் - எம்.பிக்கள், அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு!

top-news
FREE WEBSITE AD

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, பாகிஸ்தான் அரசு பொருளாதார ரீதியிலான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதனால் எம்.பிக்களின் சம்பள நிறுத்தம், அரசு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளால் தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா ராணுவம் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கூட்டு தாக்குதலை தொடங்கியது. 2 வாரங்களைக் கடந்து 3வது வாரமாக தாக்குதல்கள் நீடித்து வருகிறது.

சவுதி அரேபியா, குவைத் , பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும், அந்நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களையும் குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் உலகின் முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதால் அந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை எகிறி இருக்கிறது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் பல்வேறு நாடுகளில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தப் போர் பதற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பாகிஸ்தானில் நிலைமை படுமோசம் அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 15 நாட்களில் அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு பல மடங்கு வரை உயர்ந்துள்ளது. அதேபோல் அங்கு  பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இது பொருந்தும்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் திண்டாடி வரும் பாகிஸ்தான் அரசுக்கு இந்த நிலைமை, தலையில் இடியை இறக்கி இருக்கிறது. ஒரு பக்கம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் தலிபான்களுடன் பாகிஸ்தான் ராணுவம் சண்டையிட்டு வருகிறது.இதற்கிடையே ஈரான் போரும் பாகிஸ்தான் அரசின் நிலைமையை மோசமானதாக மாற்றி இருக்கிறது. இதனால் பொருளாதார தாக்கத்தை சமாளிக்கும் நோக்கில், அரசின் செலவுகளை குறைக்கும் புதிய சிக்கன நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் நடத்திய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், அரசின் ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு உதவியாளர்கள் ஆகியோரின் சம்பளம் அடுத்த 2 மாதத்திற்கு நிறுத்தப்பட்டு, அவை மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதல் அரசால் அளிக்கப்பட்டு இருக்கிறது.2 மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படுவதுடன், எம்பிக்களின் சம்பளத்தில் 25 சதவீதமும், அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களின் சம்பளமும் 5% முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் பணம் மக்களின் நலத்திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது தவிர்த்து அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், அடுத்த 2 மாதங்களுக்கு சாலைகளில் இருந்து 60 சதவீத அரசு வாகனங்கள் விலக்கிக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர்த்து புதிய வாகனங்கள் வாங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்கு முழுமையான தடை அமலில் இருக்கும் எனவும், அரசின் இதர கொள்முதல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *