இந்தியாவுடன் போட்டி புறக்கணிப்பு - மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!
- Muthu Kumar
- 05 Feb, 2026
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்தியாவுடன் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், லீக் போட்டியில் விளையாடுவதைப் புறக்கணித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்காக வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்தை விளையாட ஐ.சி.சி எடுத்த முடிவைத் தொடர்ந்து, இந்தியாவுடன் விளையாடுவதில்லை என்ற பாகிஸ்தானின் நிலைப்பாடு உள்ளது. பாகிஸ்தான் அணி, இதை உறுதிசெய்யும்பட்சத்தில் அந்த அணி மீது ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடாது என்பதை அந்நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், "டி20 உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது. நாங்கள் கவனமாக ஆலோசித்த பின்னரே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது ஒரு பொருத்தமான முடிவுதான்" என அவர் மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
லீக் போட்டியில் இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்திருக்கும் நிலையில், ஒருவேளை இறுதிப்போட்டிக்கு இரு அணிகளும் முன்னேறும் நிலையில், அப்போது பட்டத்திற்காக இந்தியாவுடன் விளையாடினால் பாகிஸ்தானின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து இன்னும் பாகிஸ்தான் அணி தெரிவிக்கவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



