தாக்குதல் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் பாகிஸ்தானுக்கு தகவல் - ஜெயசங்கர்!

- Muthu Kumar
- 27 May, 2025
கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, மே 7, 2025 அன்று இரவு இந்தியா 'ஆப்பரேஷன் சிந்தூர்' எனும் ராணுவ நடவடிக்கையை தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது.இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. ஆனால் அவை இந்தியாவால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலமான செய்தி தளத்தில் வெளியான கட்டுரையின் படி இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் மீதான தாக்குதலை தொடங்கிய பிறகு 30 நிமிடங்களுக்குள் அந்நாட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் ஆப்பரேஷன் சிந்தூர் துவங்கிய 30 நிமிடங்களுக்கு பின் பாகிஸ்தானை தொடர்பு கொண்டு, இந்தியா தாக்கியது பயங்கரவாத முகாம்களை மட்டுமே என்பதையும் விளக்கியதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்ததை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஜெய்சங்கர் பேசும் பொழுது அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர், இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக சுட்டிக்காட்டியதும், இந்தியா அதற்கு தக்க பதிலளிக்க தயார் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். அவர்கள் ஆரம்பித்தால் நாங்களும் தொடங்குவோம். அவர்கள் நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, "தாக்குதல் துவங்கிய தருணத்தில் பாகிஸ்தானை தொடர்பு கொண்டு பேசியது தவறானது. இதை எப்படி வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்கிறார். இதற்கு யார் அனுமதி அளித்தார்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், இது தவறான விளக்கம் என்றும், தாக்குதல் துவங்கிய பிறகு பாகிஸ்தானை தொடர்பு கொண்டது என்ற உண்மையை அவர் தனக்கு ஏற்ப திரித்து பேசுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மே 8, 9, 10, 2025 ஆகிய நாட்களில் பாகிஸ்தான், இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து பதிலடி முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்தியா அதனை சரியாக முறியடித்து, பாகிஸ்தானின் பல ராணுவ தளங்களை தாக்கியது. இந்தியா தனது தாக்குதல்களை மிகத் திட்டமிட்டு மேற்கொண்டது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *