ஆசியான் 23 வயதுக்குட்பட்ட கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற மலேசிய அணி இலக்கு!

- Muthu Kumar
- 26 Jun, 2025
இந்தோனேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசியான் 23 வயதுக்குட்பட்ட கால்பந்து கோப்பையில் மலேசியாவின் இளையோர் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது என்று பயிற்சியாளர் நபுசி சைன் தெரிவித்தார். மலேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளரான நபுசி, குழு ஏ பிரிவில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், புருணை அணிகளுடன் மோதவுள்ளதாக அறிவித்தார்.
நபுசி தனது அணியை முழுவதுமாக உள்ளூர் வீரர்களைக் கொண்டு கட்டமைத்துள்ளார். இந்தத் தொடரில் வெளிநாட்டு வம்சாவளி வீரர்களை உள்ளடக்கவில்லை. மலேசிய லீக் கோப்பையில் விளையாடிவரும் திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இந்த முடிவு, உள்ளூர் வீரர்களின் திறனை ஆசியான் வட்டத்தில் காட்டுவதற்கு ஒரு முக்கியமான தளமாக இந்தத் தொடரை மாற்றும் என்று அவர் நம்புகிறார்.
மலேசிய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. குழு நிலையை வெற்றிகரமாகக் கடந்து அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு தேவையான உத்திகளை வகுக்க நபுசி தனது குழுவுடன் இணைந்து செயல்படுகிறார். எங்கள் முதல் இலக்கு குழு நிலையைத் தாண்டுவது. ஒவ்வோர் ஆட்டமும் முக்கியமானது, மேலும் வீரர்கள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
மலேசிய கால்பந்து ரசிகர்களுக்கு, இந்தத் தொடர் இளம் வீரர்களின் திறமைகளைக் காண ஓர் அற்புதமான வாய்ப்பாக இருக்கும். இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் மலேசிய அணி எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *