குவாண்டானாமோ பே சிறையிலிருந்து தாயகம் திரும்பிய மலேசியர்கள்!

- Muthu Kumar
- 19 Dec, 2024
கோலாலம்பூர்,டிச. 19-
கடந்த 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற பாலி வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக அமெரிக்காவின் குவாண்டானாமோ பே சிறைச்சாலையில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மலேசியர்கள் நாடு திரும்பி விட்டனர்.
மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக நீதி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமெரிக்காவிலிருந்து நஸீர் லெப் மற்றும் ஃபாரிக் அமீன் ஆகியோரை ஒற்றுமை அரசாங்கம் தருவித்தது என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று தெரிவித்தார்.
அவ்விரு நபர்களும் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து குவாண்டானாமோ பே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த இருவருக்காக அரசாங்கம் விரிவான மறுஇணைவுத் திட்டமொன்றை உருவாக்கியுள்ளது. சமூகச்சேவைகள், நலனுதவி, சுகாதாரப் பரிசோதனை போன்ற வசதிகளை அத்திட்டத்தின் கீழ் அவர்கள் பெறுவார்கள் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் சைஃபுடின் கூறினார்.
இந்தோனேசியாவின் பாலித் தீவில் 2002ம் ஆண்டில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் நஸீர் (வயது 47) மற்றும் ஃபாரிக் (வயது 48)ஆகியோர் 2003ஆம் ஆண்டில் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தனித்தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததை ஒப்புக்கொண்டதால் கடந்த ஜனவரியில் அவர்களுக்கு 23ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணைக்கு முந்தைய ஓர் ஒப்பந்தத்தின்படி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர்களை விடுதலை செய்து மூன்றாவது நாடொன்றுக்கு அனுப்ப முடியும்.
அவர்கள் இருவரையும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்க அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இசைவு தெரிவித்தார்.பாலி வெடிகுண்டுத் தாக்குதலில் 202 பேர் உயிரிழந்தனர். அதற்கு மூளையாகச் செயல்பட்டவன் ஹம்பாலி எனும் இந்தோனேசிய நபர் ஆவான். அத்தாக்குதலை நடத்த ஹம்பாலிக்கு அவர்கள் இருவரும் உடந்தையாக இருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *