முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மதுபான விற்பனை!

- Muthu Kumar
- 27 Jan, 2025
ஈப்போ, ஜன. 27-
முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பகுதிகளில் மதுபான விற்பனை தொடர்பான நடப்பு வழிகாட்டிகளை ஊராட்சித்துறையினர் தவறாமல் பின்பற்றி வரவேண்டும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் நேற்று அறிவுறுத்தினார்.
பல்வேறு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணி வருவதற்கும் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்ட சில தரப்பினர் அரசியலாக்குவதைத் தவிர்ப்பதற்கும் வழிகாட்டிகளைப் பின்பற்றி வரவேண்டியது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதால் நடப்பு வழிகாட்டிகளை நாங்கள் தொடர்ந்து நிலை நிறுத்தி வருவோம். மதுபானம் அருந்தாதவர்கள் அதனை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மதுபானங்களை வாங்குவது தனிப்பட்டவர்களின் உரிமை என்பதால் அவர்களை நாம் தடுக்கவும் முடியாது என்று ஈப்போவில் பாசிர் பிஞ்சி சந்தையில் கால்கோள் விழாவொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கோர் மிங் தெரிவித்தார்.
மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கக்கோரி ஏதாவது ஒரு சமூகம் ஊராட்சித்துறையை வலியுறுத்துமானால், அதே பகுதியில் வசித்துவரும் அனைத்துக் குடியிருப்புவாசிகளின் நலன்களையும் அது கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மதுபான விற்பனை மீதான தனது தடையை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த ஈப்போ மாநகர் மன்றம் பரிந்துரையொன்றை முன்வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
உலு செப்போர், ரப்பாட் செத்தியா, கம்போங் சுங்கை ரோக்காம் ஆகிய பகுதிகளுக்கும் அத்தடையை விரிவுபடுத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன என்று ஈப்போ மேயர்
ருமாய்ஸி பஹாரின் அண்மையில் கூறியிருந்தார். தற்போது ஈப்போவின் துணை நகரான மஞ்சோயில் மட்டுமே மதுபானம் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் ஈப்போ மாநகர் மன்றத்தால் அத்தடை விதிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *