ஒரே நாளில் 2 திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது!

- Muthu Kumar
- 16 Feb, 2025
(டிகே.மூர்த்தி)
தெலுக் இந்தான், பிப்.16-
கடந்த 28.1.2025 இல் இருவேறு இடங்களில் நடந்த தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 40 வயது இந்திய முஸ்லிம் ஆடவரை சந்தேகத்தின் பேரில் கீழ்ப் பேரா மாவட்ட குற்றவியல் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிரடிக் குழுவினர் கடந்த 5.2.2025 இல் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அட்னான் பஸ்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
முதல் திருட்டுச் சம்பவம் 28.1.2025 விடியற்காலை 5.00 மணியளவில் தெலுக் இந்தான், 3 ஆவது மைல் ஜாலான் கம்போங் பாஞ்ஜார், நாராயணா உணவகத்தில் உள்ள பாதிக்கப்பட்டவரின் தங்கச் சங்கிலியை தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர் திடீரென்று பறித்த போது அங்கு இருவருக்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் கீறல்கள் ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஓசிபிடி குறிப்பிட்டார்.
அதே சந்தேக நபர் அதே நாளில் (28.1.2025) 7.06 மணியளவில் தெலுக் இந்தான் ஜாலான் சுல்தான் அப்துல்லா, ஹூவர் பார்க் என்னும் குடியிருப்பில் மலர் வியாபாரம் நடத்தி வந்துள்ள பாதிக்கப்பட்டவரின் தங்கச் சங்கிலியை பறிக்கும் போது அந்த சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை முரட்டுத் தனமாக தரையில் தள்ளியதன் விளைவாக பாதிக்கப்பட்டவருக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவரது கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் வலி ஏற்பட்டுள்ளது என்றார் ஏசிபி அட்னான்.
தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபரிடம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த சந்தேக நபர் தெலுக் இந்தான் வாகன இழுவை பட்டறையொன்றின் முன்னாள் தொழிலாளி என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2024 இல் லங்காப், சூய்சாக்கில் மின் இணைப்பு துணை நிலையத்தில் நடந்த கேபிள் திருட்டு சம்பவத்திலும், அதே ஆண்டில் தெலுக் இந்தானில் நடந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்திலும் கடந்த கால இரண்டு குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அட்னான் விவரித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 329 இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அதே நேரத்தில் கொள்ளையின் போது பாதிக்கப்பட்டவருக்கு உடலில் காயத்தை ஏற்படுத்தியதால், குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 394 இன் கீழ் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம் என்றும் சட்டம் கூறுகிறது என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *