கால்பந்தாட்டத்தைக் காணச் செல்ல பெண்ணைக் கொலை செய்த ஆடவன்!

- Muthu Kumar
- 19 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 19-
மலேசியாவின் ஹரிமாவ் மலாயா குழுவுக்கும் கம்போடிய நாட்டுக் குழுவுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டியைக் காணச் செல்ல தன்னிடம் பணம் இல்லாததால் ஆடவன் ஒருவன் இளம்பெண் ஒருத்தியைக் கொலை செய்து அவளின் நகைகளை அடகுவைத்தான்.
அந்த கொடூரச் சம்பவம் சரவாக்கின் கூச்சிங் நகரில் நடைபெற்றது. கம்போடியாவின் தலைநகர் நோம்பென்னில் ஏஎப்சி சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்கான அந்த கால்பந்தாட்டம் இம்மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது.
அப்போட்டியைக் காணச்செல்ல பணம் இல்லாததால் அப்பெண்ணைக் கொன்று அவளின் தங்கக் காதணிகளையும் தங்கக் கைச்சங்கிலியையும் அடகுக்கடையில் விற்று பணம் பெற்றுள்ளான் என்பதை அந்த ஆடவனே ஒப்புக் கொண்டுள்ளான் என்று சரவாக் போலீஸ் தலைவர் மஞ்சா அத்தா தெரிவித்தார்.
நூருல் அசிகின் (வயது 25) என்ற அப்பெண் இம்மாதம் 5ஆம் தேதியன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் அப்பெண்ணுக்கும் அந்த ஆடவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகக் கடைசியாக அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே செல்வதை சிலர் கண்டுள்ளனர்.
அவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, அந்த சந்தேகப் பேர்வழியைப் போலீசார் கைது செய்து விசாரித்ததில் கொலை செய்ததை அவன் ஒப்புக் கொண்டான். அப்பெண்ணின் சடலத்தை கூச்சிங், தாபுவான் ஜெயா எனும் இடத்தில் போட்டு வைத்துள்ளதாகவும் அவன் கூறியுள்ளான்.
ஆயினும், அப்பெண்ணின் உடல் முற்றிலும் அழுகிய நிலையில் இருப்பதால் அவரை அடையாளம் காண முடியவில்லை என்று மஞ்சா குறிப்பிட்டார். நூருலின் குடும்ப உறுப்பினர்களும் அவரால் அடையாளம் காண முடியவில்லை என்று அவர் கூறினார். மரபணுச் சோதனைக்குப் பிறகே அது உறுதிப்படுத்தப்படும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *