அனைத்துலக ஒழுங்குமுறை மாநாட்டில் பல முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்பட்டன!

- Muthu Kumar
- 11 Jan, 2025
கோலாலம்பூர், . 11-
வளர்ந்து வரும் இலக்கவியல் தோற்றத்தில் புத்தாக்கம் மற்றும் ஒழுங்கு முறைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சியின் ஏற்பாட்டிலான ஆணைய 2025 ஐஆர்சி அனைத்துலக ஒழுங்குமுறை மாநாடு, நேற்று நிறைவடைந்தது.
அந்த இரண்டு நாள் மாநாட்டில், தொலைத்தொடர்பு விதிமுறைகள், இணைய பாதுகாப்பு மீளும் தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஏஐ உருமாற்ற தாக்கம் உட்பட பல்வேறு முக்கிய தலைப்புகளும் விவாதிக்கப்பட்டதாக தொடர்பு துணை அமைச்சர், தியோ நீ சிங் தெரிவித்தார்.'கூட்டு முயற்சிகள், புத்தாக்க சிந்தனை மற்றும் அனைத்துலக கூட்டாண்மை வழியாக அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை வழி வகுக்கும் என்பதை 2025 ஐஆர்சி காட்டியுள்ளது”, என்று அவர் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஐஆர்சி 2025 மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய தியோ, மலேசியா முன்னுதாரணமாக இருக்க உறுதிபூண்டுள்ளதோடு, நம்பிக்கை, நெறிமுறைகள் மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து வளர்க்கும் என்று கூறினார்.
தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை நிர்வகிக்கும் நோக்கத்தில் ஆசியான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அனைத்துலக நிபுணர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாக ஐஆர்சி 2025 விளங்குகிறது.
ஒருங்கிணைந்த, நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துவதற்கும் எம்சிஎம்சி, முழுமையான ஈடுபாட்டை வழங்கும் என்று கூறிய தியோ, ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் நாடுகளின் எதிர்காலத்தைத் தொடர்ந்து வடிவமைப்பதற்கான அணுகுமுறையையும் அது பிரதிபலிக்கும் என்றார்.
"2023ஆம் ஆண்டில், எம்சிஎம்சி, சமூக ஊடகங்களில் இருந்து மொத்தம் 6,297 மோசடி தொடர்பான இணைய உள்ளடக்கங்களை நீக்கியது. இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 63,652 சம்பவங்களாக அதிகரித்தது. இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது. இணையத்தில் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஏமாற்றும் உள்ளடக்கங்கள் அதிகரித்து வருவதை, அது குறிக்கிறது", என்றார் அவர்.இணையத் தள வழங்குநர்களும் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
விளம்பரங்களை ஏற்றுக் கொள்வதற்கான திரையிடல் செயல்முறையைக் கடுமையாக்குவதோடு, பயனர்கள் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்க குறியீட்டு நடவடிக்கைகளையும் அவர்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தியோ வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *