பத்து பூத்தே விவகாரத்தில் மேலும் பல புகார்கள் செய்யப்படலாம்!

- Muthu Kumar
- 19 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 19
பத்து பூத்தே இறையாண்மை விவகாரம் கையாளப்பட்ட விதம் தொடர்பில், அடுத்து வரும் நாட்களில் மேலும் பல போலீஸ் புகார்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமதுவின் வழக்கறிஞர் கூறுகிறார். நாபத்துழுமையிலும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் நேற்று முன்தினமும் நேற்றும் பல போலீஸ் புகார் செய்யப்பட்ட பின்னர், ரஃபிக் ரஷிட் அலி இவ்வாறு கூறியுள்ளார்.
அப்புகார்கள் வங்சா மாஜு, டாங் வாங்கி, சுபாங் ஜெயா, செராஸ், காஜாங் மற்றும் ஜோர்ஜ்டவுன் ஆகிய மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ளன.பத்து பூத்தே விவகாரம் மீதான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ) கண்டு பிடிப்புகளுடன் தொடர்புடைய, தவறாக நிர்வாகம் மற்றும் தவறாக வழி நடத்தும் அறிக்கைகள் தொடர்பில் அப்புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
"கெடாவின் சுங்கைப்பட்டாணி மற்றும் இதர மாநிலங்களில், அடுத்து வரும் நாட்களில் மேலும் பல போலீஸ் புகார்கள் செய்யப்படக் கூடும் என்று அறியப்படுகிறது" என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ரஃபிக் கூறினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முன்னாள் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில், போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் மற்றும் முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு ஆகியோர் மீது போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக, அப்புகார்களை செய்திருப்பவர்களை பிரதிநிதிக்கும் ரஃபிக் தெரிவித்தார். ஆர்சிஐயினால் முன்வைக்கப்பட்டுள்ளதுபோல், பத்து பூத்தே விவகாரம் கையாளப்பட்டதில் முறையற்ற செயல்பாடு நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது தொடர்பில், அப்போலீஸ் புகார்களில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் டான் ஸ்ரீ அபாண்டி அலியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
புகார்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 415(பி), செக்க்ஷன் 504 மற்றும் செக்ஷன் 505(பி) ஆகியவற்றை மீறியிருப்பதாக, புகார் செய்திருப்பவர்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.பத்து பூத்தே மீதான அனைத்துலக நீதிமன்றத்தின் 2008ஆம் ஆண்டு முடிவை மீள்பார்வை செய்ய மற்றும் கருத்தை தெரிவிப்பதற்காக விண்ணப்பம் செய்வதற்கு எதிராக, மகாதீர் தனித்தே முடிவு செய்ததாக, இம்மாதத் துவக்கத்தில் வெளியிடப்பட்ட ஆர்சிஐயின் வகைப்படுத்தப்பட்ட அறிக்கை கூறுகிறது.
“எனது பார்வையில், இந்த முயற்சி (விண்ணப்பம்) தொடரப்பட வேண்டியதில்லை” என்று கூறும் ஒரு கடிதத்தை, அப்போது பிரதமராக இருந்த மகாதீர், கடந்த 2018ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி துணைத் தலைமை வழக்கறிஞருக்கு எழுதியிருந்ததாக தனது அறிக்கையில் ஆர்சிஐ குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *