மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா? கல்வி அமைச்சுக்கு ஓம்ஸ் பா.தியாகராஜன் கேள்வி

- Shan Siva
- 09 Dec, 2024
கோலாலம்பூர், டிச 9: UPSR தேர்வு வேண்டாம் என்பதில் விடாப்பிடியாய் இருக்கிறார் நமது கல்வி அமைச்சர். காரணம் சிறு வயதிலேயே பரீட்சை வைத்து அதில் தோல்வி கண்டால் தற்கொலை முடிவை மாணவர்கள் நாடுகிறார்கள் என்று சொல்கிறார்.
நன்றாகப் படித்திருந்தும் எதிர்பாராத முடிவு வராததால் ஒரு சிலர் தற்கொலை முடிவை நாடுவது வருத்தம்தான். ஆனால், அதற்காக UPSR தேர்வு வேண்டாம் என்று பிடிவாதம் பிடிப்பது நல்லதல்ல என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்வு இல்லை என்றால், படிப்பின் மீது அக்கறை உள்ள மாணவர்கள் மட்டும் அடுத்த நிலைக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வார்கள். ஆனால், எண்ணிக்கையில் அத்தகைய மாணவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.
அதே வேளை படிப்பு வராத அல்லது படிப்பின் மீது அக்கறை இல்லாத மாணவர்கள் தேர்வு இல்லை என ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார்கள். கடைசியில் தேர்வு என்கிற பயம் இல்லாமல், அவர்களின் வாழ்கையே சீரழிவுக்குள்ளாகும்.
தேர்வு தேவை இல்லை என்று கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படியென்றால் கல்வி அமைச்சு எதற்கு? கல்வி அமைச்சர் ஏன்? கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் இவர்களெல்லாம் தேவையே இல்லையே.
தேர்வு என்பது இல்லை என்றால் பிள்ளைகளின் தரத்தை எப்படி கண்காணிப்பது?
தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஒட்டு மொத்த பள்ளிக்கூடமே பரபரப்பாய்தான் இருக்கும்.
எந்தப் பள்ளி அதிகமான அடைவுநிலையைப் பெற்றுள்ளது? எந்தப் பள்ளியின் மாணவன் அல்லது மாணவி முதலிடத்தைப் பிடித்துள்ளார்கள்? எந்தப் பள்ளி தமிழில் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளது? எந்தப் பள்ளி மலாய் மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளது? என ஆர்வமாய் காத்திருப்பார்கள்.
ஆசிரியர்களுக்கும் அது தேர்வு மாதிரிதான் இருக்கும்.
அந்த எதிர்பார்ப்பும், அடைவுநிலையும்தான் அடுத்தடுத்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒரு குறிகோளோடு இயங்க வைக்கும்.
பள்ளியில் தேர்வு இல்லை என்றால் என்ன ஆகும் என்று சிந்திக்க வேண்டும்.
மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் கதையாய் ஆகிவிடக்கூடாது.
முன்பிருந்தவர்கள் செய்ததைப் போலவே தற்போதைய அமைச்சும் UPSR ஐ நிராகரிப்பது அமைச்சின் இயலாமையைத்தான் காட்டுகிறது.
‘கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றயவை’ என்பது வள்ளுவன் வாக்கு.
ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். மற்ற பொன் பொருள் போன்ற செல்வங்கள் எல்லாம் செல்வமே ஆகாது என்கிறார் வள்ளுவர்.
அத்தகைய அழிவில்லாத செல்வத்தை மேற்கொண்டு தொடர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் இத்தகைய தேர்வு முறையை இல்லாமல் செய்வது நம் பிள்ளைகளின் எதிர்காலத்தையே பாழாக்கிவிடும்.
ஆறாம் வகுப்புதான் நம் பிள்ளைகளுக்கு ஏணிப்படி. அவர்கள் இடைநிலைப்பள்ளிக்குச் செல்வதற்கு தகுதி அடிப்படையில் தரம் பார்ப்பது UPSR தேர்வுதான்.
ஆனால், UPSR வேண்டாம் நேராக இடைநிலைப்பள்ளிதான் என்பதெல்லாம் தவறான வழிமுறை.
அதோடு ரிமூவ் கிளாஸ் போன்ற சிக்கல்கள் எல்லாம் அந்தந்த பள்ளியின் ஒரு சில ஆசிரியர்களின் சுய விருப்பத்தின் பேரில் கூட அமைய வாய்ப்பிருக்கிறது.
அரசு தேர்வு இல்லை என்றால் அது ஆசிரியர் தேர்வாகத்தான் இருக்கும். எல்லா முடிவுகளும் ஆசிரியர் கைகளில்தான் என்ற நிலை வந்துவிடும். அப்படியான சூழலில் ஒரு சில ஆசிரியர்கள் குறுக்கு வழியில் போகும் சாத்தியமும் இருக்கிறது.
ஆசிரியர்களைக் குறைசொல்ல முடியாது என்றபோதிலும், ஒரு சிலரால் இப்படி அமைய சாத்தியம் உள்ளது.
மேலும், மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் உத்வேகம் குறையும் வாய்ப்புகள் இருக்கிறது.
இவ்விவகாரத்தில், சராவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி சொல்வதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்வு இல்லாத மாணவர்கள் பலவீனமானத் தலைமுறையை உருவாக்குவார்கள். சவால்களைக் கண்டு எதிர்த்து நிற்கும் துணிச்சல் இல்லாமல் போகும். எந்தவொரு சவால்களையும் எதிர்நோக்காமல் மாணவர்கள் வளர்ந்தால் அவர்கள் கல்வியின் தரத்தை எதை வைத்து தரப்படுத்தவும் மேம்படுத்தவும் முடியும்? எதுவும் முடியாது. அவர்கள் ஓர் இயந்திர வாழ்க்கையைத்தான் வாழ்வார்கள் என்று ஜொஹாரி குறிப்பிடுகிறார்.
எனவே இவ்விவகாரத்தை கல்வி அமைச்சு சீர்தூக்கிப் பார்த்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.
அதை கல்வி அமைச்சு நிறைவேற்றும் என நம்புவோம் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *