வைகாசி விசாகம் என்றால் என்ன? - அந்த நாளில் நடந்த புராண நிகழ்வுகளின் சிறப்புகள்
- Surendran Sumdraraj
- 28 May, 2026
வைகாசி விசாகம் முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய மிக அற்புதமான நாள். இந்த நாளின் சிறப்பம்சம் என்ன, எப்படி வழிபட வேண்டும்.இளவேனிற் காலத்தின் பிற்பகுதி என்பதால் வைகாசி மாதம் வசந்த காலமாக இந்தியாவில் உள்ளது. எனவே இந்த வசந்த காலமான வைகாசி விசாக தினத்தில் கோயிலில் வசந்த உற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.
விசாக நட்சத்திர ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும்.முருகப்பெருமான் இந்த விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்று பெயர். வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்படும். ஆறுமுகன் அவதரித்த இந்த பௌர்ணமியுடன் கூடி வரக்கூடிய வைகாசி விசாக நட்சத்திரம் ஆகும். இந்த அற்புத வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் அதே வேளை எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
,வைகாசி விசாகம் சிறப்புகள்
இந்த விசேச தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறதுஇந்த திருநாளில் திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை அதில் இடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவு படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
மகாபாரதத்தின் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள். பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.
வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள்.
தஞ்சை பெரிய கோயிலில் பொக்கிசமாகப் பல கல்வெட்டுகள் உள்ளன. அதில் பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக அரங்கேற்றுபவர்களுக்கு, ஆண்டுதோறும், வைகாசி விசாக தினத்தில் நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கி ராஜேந்திர சோழன் ஆணையைப் பிறப்பித்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம்.
இந்த சிறப்பான நாளில் தான் பெரும்பாலான கோயில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது.
முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவார்கள் என கருதப்படுகிறது.
வால்மீகி ராமாயணத்தில் ராம - லட்சுமணனுக்கு முருகப்பெருமானின் பிறப்பு மற்றும் அவரின் அருமை பெருமைகளை விளக்கி கூறுவது போல அமைந்திருக்கும். இதனை கேட்பவர்களுக்கு அவர்களின் பாவம் நீங்கி புண்ணியத்தை அடைவார்கள் என்றும், இந்த நிகழ்வை குமார சம்பவம் என வால்மீகி குறிப்பிடுவார்.
இதை தழுவியே வட மொழி கவிஞர்கள் குறிப்பாக காளிதாசர் முருகப்பெருமானின் அவதாரம் குறித்து அவரின் நூலான குமார சம்பவம் என்று குறிப்பிடுகிறார். நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோனா கெளதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில் தான் ஞானத்தை அடைந்த நாளாக கருதப்படுகிறது.
இப்படி பல சிறப்புகள் நிறைந்த வைகாசி விசாக தினத்தில் நாமும் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகை செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.
:- லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



