மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகள் ரகசியமானவை- அமைச்சர் ஸலிஹா!

- Muthu Kumar
- 10 Jan, 2025
புத்ராஜெயா, ஜன. 10-
நஜிப் ரசாக்கின் அரச மன்னிப்பு விண்ணப்பம் தொடர்பாக கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அந்த வாரியம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா நேற்று நிராகரித்தார்.அவ்வாரியத்தின் கூட்டக் குறிப்புகள் வெளியிடப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
கூட்டக்குறிப்புகள் ரகசியமானவை. ஆகவே, அவை வெளியிடப்படாது என்று புத்ராஜெயாவில் அலாமண்டா பேரங்காடி மையத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். அக்கூட்டக்குறிப்புகளைப் பெறுவதற்கு அரச மன்னிப்பு வாரியத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஸலிஹா சொன்னார்.
பேரரசர் தலைமையிலான கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தில் ஜலீஹா ஓர் உறுப்பினர் ஆவார். கூட்டரசுப் பிரதேச அமைச்சர் எனும் முறையில் அதில் அவர் உறுப்பினராக உள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சரான அவர், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் கூட்டரசு அமைச்சுக்கு மாற்றப்பட்டார்.
கடந்தாண்டு ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற
அவ்வாரியத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டார் ஆக்கின் நேற்றுமுன்தினம் வலியுறுத்தியிருந்தார். அக்கூட்டத்தில்தான் நஜிப்பின் சிறைத்தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது.
நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கக்கோரும் அரச உத்தரவை அப்போதைய பேரரசர் அப்துல்லா அமாட் ஷா வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு இது உதவும் என்றும் ஷம்சுல் வலியுறுத்தியிருந்தார்.
அந்த உத்தரவு பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கத் தரப்பில் கூறிவந்த வேளையில், அந்த உத்தரவின் பிரதியொன்றை நஜிப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா துல்லா கடந்த திங்களன்று நீதிமன்றத்தில் வெளியிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *