பட்டத்து இளவரசருடன் திருமணமா? பெண் கூற்று அவதூறானது பகாங் அரண்மனை!
- Muthu Kumar
- 11 Dec, 2024
குவாந்தான், டிச. 11-
பகாங்கின் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசானால் இப்ராஹிம் ஆலம்ஷா அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையப் பக்கமொன்றில் வெளிவந்த தகவலை பகாங் அரண்மனை மறுத்துள்ளது.
பட்டத்து இளவரசரைத் தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஃபாரிடா டாவுட் எனும் பெயரைக் கொண்ட ஒரு பெண் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதனைப் பகாங் அரண்மனையின் தலைமைப் பொறுப்பாளர் மேஜர் ஜெனரல் டத்தோ முகமது ஸஹாரி யாஹ்யா கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார்.அந்தப் பதிவு அவதூறான ஒன்று என்றும் அவர் சாடினார்.
தெங்கு மக்கோத்தா அடுத்தாண்டு ஏப்ரலில் தன்னை மணம் புரியவிருக்கிறார் என்று அப்பதிவில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். அப்பெண் தன்னை தெங்கு மக்கோத்தாவின் நெருங்கிய தோழி என்றும் கூறிக் கொண்டுள்ளார். அப்பெண் ஏற்கெனவே, இதுபோன்ற அவதூறான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்றும் ஸஹாரி சொன்னார்.
பகாங்கின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வெளியாகும் தகவல்கள் மட்டுமே உண்மையானவை. மற்றவற்றை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். பொது அமைதியைக் குலைக்கும் வகையிலான அவதூறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஸஹாரி குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



