மேஷ ராசிக்கு செவ்வாயால் வரப்போகும் பிரச்சனை!

- Muthu Kumar
- 03 Jun, 2025
ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.
செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
சனி, செவ்வாய் சம்பந்தப்பட்டாலே உலகளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு எதிரிகளால் தொல்லை ஏற்படும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டில் பிரதமர் மோடி தலைமையில் உலகளவில் செல்வாக்கை நிலைநிறுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். விருச்சிக ராசியில் 10 ஆம் இடத்திற்கு செவ்வாய் வருவதால் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதில், பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், சில தேவையற்ற செலவுகளையும் ஏற்படுத்தும்.
இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிகளுக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பதை பார்க்கலாம்.
உங்களுடைய ராசிநாதனாகிய செவ்வாய் 4 ஆம் இடத்தில் நீச்ச ஸ்தானத்தில் இருந்தார். இதனால் வீடு, மனை சார்ந்த விஷயங்களில் ஏமாற்றங்களும், வரவேண்டிய சொத்துகளில் பங்கு பிரிப்பதில் பிரச்சனையும் இருந்திருக்கும். ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த பிரச்சனைகள் தென்பட்டிருக்கும். ஒன்றுமே இல்லாத விஷயம், எதிர்காலத்தை எண்ணி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்திருக்கும்.
செவ்வாய் இதுவரை நீச்ச ஸ்தானத்தில் இருந்த நிலையில், தற்போது 4 இல் இருந்து 5 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகவுள்ளது. பொதுவாக 4, 5 ஆம் இடம் பெரிய நல்ல பலன்களைத் தராது. சுமாரான பலன்களை மட்டுமே தரும். 5 ஆம் இடம் என்பது உடன்பிறப்புகள் சார்ந்த விஷயமாகும். அதனால், அண்ணன் தம்பி பிரச்சனை, பங்காளி பிரச்சனை, பூர்வீக சொத்து பிரச்சனை, முன்னோர்களின் சொத்து பிரச்சனை, வழக்கு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. அதன் மூலமாக அலைச்சல்கள் அதிகரிக்கக் கூடிய சூழல் இருக்கும்.
வியாபாரத்தைப் பொருத்தவரை வார்த்தை விரையங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. யாரிடம் பேசினாலும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்தாலும் நிறைய நன்மைகள் ஏற்படும். இனிமையான வார்த்தைகளைப் பேசுவீர்கள். ஆனால் எதிரில் இருக்கும் உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தையால் காயப்படுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரம், தொழில் செய்பவர்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். நிறைய பணங்கள் தேவைப்படும் காலகட்டமாக இருக்கும். செவ்வாய் கடனுக்கும் அதிபதி என்பதால் சொத்தை அடமானமாக வைத்து அதில் இருந்து கடன் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இது உங்கள் குடும்பத்தாரின் எதிர்ப்பை பெறக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். மூத்த சகோதரர் எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்புள்ளது.
ஜூன் 6 முதல் ஜூலை 28 ஆம் தேதி வரை உடன்பிறப்புகளுடன் மோதல் போக்கு வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. முடிந்தளவுக்கு முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எதிரிகள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதால் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பீர்கள். அதனால் எதிரிகளை சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *