இன்று முதல் எஸ்டிஆர் ரொக்கம் வழங்கப்படுகிறது!

- Muthu Kumar
- 22 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 22-
ரஹ்மா ரொக்க உதவித் தொகை (எஸ்டிஆர்) இன்று புதன்கிழமை முதல் வழங்கப்பட விருக்கிறது. நான்கு கட்டங்களாக வழங்கப்பட விருக்கும் இத்திட்டத்திற்காக அரசாங்கம் இவ்வாண்டில் மொத்தம் 230 கோடி வெள்ளியை ஒதுக்கி இருக்கிறது.கடந்த 2024ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 210 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாக, நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் நிதி அமைச்சு அறிவித்தது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை மக்கள் சமாளிப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், இவ்வாண்டுக்கான தொகையில் சற்று அதிகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக, பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
"வாழ்க்கைச் செலவினத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு உலகளாவிய ஒரு விவகாரமாக இருந்தாலும்,ரஹ்மா அடிப்படை உதவி (சாரா) மற்றும் எஸ்டிஆர் ஆகியவற்றில் செய்யப்பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, ஒரு சிறந்த வாழ்க்கை முறையை அனுபவிக்க மக்களுக்கு உதவி புரியும் என்று அந்த அறிக்கையில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, 1,000 கோடியிலிருந்து 1,300 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் மூலம், சாரா மற்றும் எஸ்டிஆர் முன்முயற்சிகளுக்கு அரசாங்கம் ஓர் உந்துதல் சக்தியை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
இந்த முன்முயற்சிகள், நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களில் 60 விழுக்காட்டினர் அல்லது 90 லட்சம் பேருக்கு பலனளிக்கும்.
கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட உச்ச ரொக்கத் தொகையின் அளவு 3,700 வெள்ளியாக இருந்தது. இவ்வாண்டில் அதில் 25 விழுக்காடு அதிகரித்து 4,600 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது பரம ஏழை மக்களுக்கான தொகையாகும். திருமணமாகாத மற்றும் மூத்த குடிமக்கள் இவ்வாண்டில் 600 வெள்ளியைப்பெற விருக்கின்றனர். கடந்த ஆண்டில் இத்தொகை 500 வெள்ளியாக இருந்தது.
இவ்வாண்டுக்கான எஸ்டிஆர் ரொக்கப் பணம் கடந்த ஆண்டைப் போலவே நான்கு கட்டங்களாக வழங்கப்பட இருக்கின்றன. முதல் கட்டம் இன்று தொடங்குகிறது.இதில், பேங்க் சிம்பானான் நேஷனலில் கணக்கு வைத்திருப்போர் இன்று முதல் அதை பெற்றுக் கொள்ளலாம். இதர வங்கிகளில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இன்று மாலை அல்லது அடுத்த சில நாட்களுக்குள் அத்தொகையைப் பெறலாம்.இதனிடையே, இந்த உதவித் தொகைக்கான புதிய விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரிவினர் எஸ்டிஆர் அதிகாரப்பூர்வ இணையப் பக்கம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *