நீர் விநியோகம் துண்டிப்பு-கீழ்ப் பேராவில் 50 ஆயிரம் பேர் பாதிப்பு!

- Muthu Kumar
- 13 Feb, 2025
(டிகே.மூர்த்தி)
தெலுக் இந்தான், பிப். 13-
கடந்த 7 நாள்களாக கீழ்ப் பேரா மாவட்டத்தில் தெலுக் இந்தான் நகர் உள்ளிட்ட சங்காட் ஜோங், பாடாங் தேம்பாக், கம்போங் பாஞ்சார். செலாபா வட்டாரம், ஜாலான் மகராஜா லேலா, ஜாலான் சுல்தான் அப்துல்லா ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் பேர் தண்ணீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த குடிநீர் துண்டிப்பு என்பது இன்னும் எத்தனை நாள்களில் சரி செய்து மக்களுக்கு வழக்கம் போல் தண்ணீர் கிடைக்கும் என பேரா குடிநீர் வாரியம் தெற்கு மாவட்ட அலுவலகம் தெரிவிக்காமல் இருக்கின்றது. இந்த குடிநீர் துண்டிப்பு செய்துள்ள காலகட்டத்தில் கீழ்ப் பேரா மாவட்ட பொது மக்கள் தண்ணீர் கிடைக்கும் இடத்தைத் தேடி அலைகின்றனர்.
குடிநீர் இன்றி மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக பாதிப்புக்கு பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முகமது தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் பக்கத்து சிலாங்கூர் மாநிலமும் கிளந்தான் மாநிலமும் குடிநீரை லோரிகளின் மூலம் குடியிருப்பாளர்களுக்கு குறிப்பிட்ட அளவில் வழங்குகின்றன. இதுநாள் வரையில் 7 நாள்கள் தொடர்ந்து குடிநீர் துண்டிப்பு என்பது கீழ்ப் பேரா மாவட்டம் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும் என்கின்றனர். தண்ணீர் கிடைக்கும் இடத்திற்கு எவ்வளவு தூரமாக இருப்பினும் அவ்விடத்திற்கு வாகனங்களில் சென்று காசு கொடுத்தும் குடிநீர் பெற்று வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
அந்த சூழ்நிலையில், பேரா ஆற்றிலிருந்து 160,000 லிட்டருக்கும் கூடுதலான தண்ணீரை எடுத்து அந்நீரை சுகாதார முறைப்படி சுத்தகரிப்பு செய்த பின்னர் அந்த குறிப்பிட்ட ஆற்று நீர் லோரிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் தண்ணீர் பிரச்சினையை ஓரளவுக்கு குறைப்பதற்கும் மாநில அரசு இதனை கையாண்டு வருகிறது. இதனிடையே, தண்ணீர் கிடைக்கப் பெறும் நல்ல உள்ளம் கொண்டோர் குடிநீர் கிடைக்கப் பெற்றிடாதவர்களுக்கு இலவசமாகவும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் கும்பாபிஷேகம் கண்டுள்ள ஆனந்த நடராஜர் ஆலய நிர்வாகம் மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்குகின்றது என்பது பாராட்டுக்குரியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *