பேட்மிண்டன் ஜாம்பவான் விக்டர் ஆக்செல்சன் ஓய்வு அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 16 Apr, 2026
உலக பேட்மிண்டன் அரங்கில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த டென்மார்க் வீரர் விக்டர் ஆக்செல்சன், தொழில்முறை பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 32 வயதான அவர் தொடர்ந்து ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் முதுகு வலி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பேட்மிண்டன் உலகில் ஆதிக்கம் செலுத்திய ஆக்செல்சன், தனது காலத்தில் இரு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றதுடன், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றியவர். தோக்கியோ 2020 மற்றும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்று வரலாறு படைத்த அவர், உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீரர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
ஓய்வு அறிவிப்பில் பேசிய ஆக்செல்சன், “எனது வாழ்க்கையே பேட்மிண்டன் தான். ஆனால் இனி மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடவும் பயிற்சி மேற்கொள்ளவும் உடல் அனுமதிக்கவில்லை. இது மிகவும் கடினமான முடிவு” என உருக்கமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றும் உடல் முழுமையாக குணமடையாததால் ஓய்வு பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆக்செல்சனின் திடீர் ஓய்வு அறிவிப்பு பேட்மிண்டன் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



