நான் அமெரிக்காவுக்கு வர முடியாது- ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் பேசிய மோடி!

- Muthu Kumar
- 18 Jun, 2025
கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த ஏப்ரல் 22-ம்தேதி, தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மே மாதம் 7-ம் தேதி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத நிலைகள் மீது, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்ற பெயரில் இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக தாக்குதல்கள் தொடர்ந்ததால் பதற்றம் ஏற்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் நிலவியது.
இந்நிலையில், 10-ம் தேதி திடீரென இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தின. இது குறித்த தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு தானே காரணம் எனவும், இரு நாடுகளுடனும் வர்த்தகத்தை நிறுத்துவதாக மிரட்டியதால், சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அதைத் தொடர்ந்து பல இடங்களில் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளிடையே அவர் தான் மத்தியஸ்தம் செய்து, பெரும் அணு ஆயுதப் போரை நிறுத்திவிட்டதாக கூறியதோடு, இன்னமும் கூறி வருகிறார்.ஆனால், இந்தியாவோ, ட்ரம்ப்பின் கூற்றுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்க எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும் கூறி வந்தது.
இந்த நிலையில், தற்போது கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேச இருந்தார். ஆனால், ட்ரம்ப் முன்கூட்டியே கிளம்பிய நிலையில், அவருடன் தொலைபேசி வாயிலாக இன்று பேசியுள்ளார்.
இது குறித்த தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, மோடி-ட்ரம்ப் இடையேயான உரையாடல் 35 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, வர்த்தக ரீதியிலான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே தாக்குதல் கைவிடப்பட்டது என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
அதேடு, கனடா பயணத்தை முடித்து இந்தியா திரும்பியதும், அமெரிக்காவிற்கு வருமாறு ட்ரம்ப் விடுத்த அழைப்பையும், பல்வேறு அலுவல்களை சுட்டிக்காட்டி, அங்கு வர இயலாது என பிரதமர் மோடி தெரிவித்ததாகவும் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து, QUAD உச்சி மாநாட்டிற்கு இந்தியா வருமாறு, ட்ரம்ப்புக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *