வளர்ப்பு மகன் ரிஸா நேர்மையான பணம் மூலம் படம் தயாரித்தார்- நஜிப் சாட்சியம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜன. 24-

ஹாலிவூட் திரைப்படத் தயாரிப்பாளரான தம்முடைய வளர்ப்பு மகன் ரிஸா அஸிஸ் நேர்மையாகக் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் படங்களைத் தயாரித்தார் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். அபுதாபியின் ஆபார் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிஜேஎஸ் எனும் நிறுவனம் ரிஸாவுக்கு நேரடிக் கடன் எனும் நிலையில் பணத்தை வழங்கியது என்று முன்னாள் பிரதமரான நஜிப் குறிப்பிட்டார்.

அமீரக அரச குடும்பத்தினரைச் சேர்ந்தவரான ஷேக் மன்சூர் பின் ஸாயிட் அல் நஹ்யான் என்பவரின் இணக்கத்தின் பேரில் கடன்தொகை வழங்கப்பட்டதால் அதனை ரிஸா ஏற்றுக் கொண்டார் என்று தம்முடைய வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லாவின் மறுவிசாரணையின்போது நஜிப் குறிப்பிட்டார்.

அதுவொரு கடன்தொகை என்பதால் ரிஸா அதனை ஏற்றுக் கொண்டார். அது சட்டவிரோதமான பணம் அல்ல என்பது உறுதியாகத் தெரிந்த பிறகுதான் அதனை வாங்கிக் கொள்ள அவர் சம்மதித்தார். இல்லையெனில், அதனை நிராகரித்திருப்பார். திரைப்படங்களைத் தயாரித்து நிறைய பணமும் சம்பாதித்தார். கடனையும் அவர் பெற்றுக் கொண்டார். அதுவொரு கணிசமான தொகை என நினைக்கிறேன் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுய்ரா முன்னிலையில் நடைபெற்றுவரும் விசாரணையில் நஜிப் குறிப்பிட்டார்.

ரெட் கிரானைட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரிஸா, கடந்த 2013ஆம் ஆண்டில் 'தி ஊல்ஃப் UV ஆஃப் வால் ஸ்திரீட் எனும் ஹாலிவூட் படத்தைத் தயாரித்து வெளியிட்டார். லியானார்டோ டிகாப்ரியோ, மேத்யூ மெக்கானகி, மார்காட் ரோபி போன்ற நட்சத்திர நடிகர்கள் நடித்த அப்படம் மாபெரும் வெற்றி கண்டது.

1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான 230 கோடி வெள்ளியை கையாடியதாக 71 வயதான நஜிப் மீது 25 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவ்வழக்கில் நஜிப் தற்காப்பு வாதம் செய்து வருகிறார். அப்பணம் நஜிப்பின் அம்இஸ்லாமிக் பேங்க் வங்கிக் கணக்குகளில் வரவுவைக்கப்பட்டிருந்தது.
அப்பணம் சவூதி அரேபியாவில் கிடைக்கப்பெற்ற நன்கொடை என்று நஜிப் வாதிட்டு வருகிறார்.

அப்பணம் சவூதியின் நன்கொடைப் பணமாக இல்லாதிருக்குமானால் அது பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கும் என்றும் நேற்றைய சாட்சியத்தில் நஜிப் சொன்னார்.
அம்இஸ்லாமிக் வங்கியில் வரவுவைக்கப்பட்டிருந்த அந்தப் பெரும் பணம் சவூதியின் நன்கொடையாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அது நான் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானதாக இருந்திருக்கும் என்றார் அவர்.

அப்பணம் சவூதி அரேபியாவைத் தவிர்த்து வேறு இடங்களிலிருந்து வந்திருக்கலாம் என்று ஊகித்தீர்களா என்று தமது வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா கேட்டதற்கு, இல்லவே இல்லை என்று நஜிப் பதிலளித்தார்.
சவூதி அரேபியாவைத் தவிர்த்து வேறு வட்டாரங்களிலிருந்து தமது வங்கிக் கணக்குகளுக்கு பணம் வந்திருக்குமானால், அதனை மத்திய வங்கி கண்டுபிடித்திருக்கும். அதனால் பெரும் பிரச்சினையை நான் எதிர்நோக்க வேண்டி வந்திருக்கும். அது தற்கொலைக்குச் சமமாகும் என்றார் நஜிப்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *