கல்வியும் ஒழுக்கமும் மாணவர்களின் நம்பிக்கைச் சிறகுகள்-பேராசிரியர் இராஜேந்திரன்!
- Muthu Kumar
- 06 Dec, 2024
(டிகே.மூர்த்தி)
புக்கிட் ரோத்தான், டிச.6-
நேற்று முன்தினம் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின்(சிலாங்கூர்-பேரா) சார்பில் இங்குள்ள அருள்மிகு சக்தி தேவஸ்தானத்தில் இவ்வாண்டு எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வு எழுதும் இந்திய மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையில் நடந்தேறிய இந்நிகழ்வில், சுமார் 250 மாணவர்களும் 100 பெற்றோர்களும் பங்குகொண்ட நிகழ்வு சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது என்றும் செகிஞ்சான் பாரிட் அம்பாட்டில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தின் பொருளாளர் ஜிகே.நடராஜன் கூறினார்.
கலந்து கொண்ட மாணவர்களுக்கு இனிப்பு இல்லாத காலை பலகாரம் தேநீர் மற்றும் மதிய நேரத்தில் சைவ உணவும் வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பேராதரவு கொடுத்த அனைத்து நல்லோர்களுக்கு இந்த வேளையில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை கூறுகிறேன் என்றார்.
தவிர, மாணவர்களுக்கு கல்வி மற்றும் நம் இந்து சமயம் குறித்து விளக்கம் அளித்துள்ள மாமன்றத்தின் ஆலோசகரும் பேராசிரியருமான என்.எஸ். இராஜேந்திரன் பேருரையும் மற்றும் சிவஸ்ரீ அ.ப.முத்துகுமார் குருக்களின் ஆசியும் பெற்ற நிகழ்வாக மாணவர் சமுதாயத்திற்கு அமைந்தது.
இந்நிலையில், இராஜேந்திரன் பேசுகையில், நாட்டின் வளர்ச்சியில் பல தரவுகளை எடுத்துக் கொண்டால், நம் நாட்டைப் பொறுத்தவரை தேசியக் கோட்பாடான ருக்குன் நெகரா நாட்டுப்பற்றுடன் வழி நடத்தும் முதன்மையாகத் திகழ்கிறது என்றார்.தவிர, கல்வி மற்றும் சமயமும் அது சார்ந்த ஒழுக்க நெறியுமே மாணவர்களை பண்பு நிறைந்தவர்களாக செதுக்கும் சிறப்பியாகும். திருவள்ளுவரும் ஒழுக்க நெறியைப் பின்பற்றி சமுதாயத்தோடு இணைந்து வாழாதோர் எவ்வளவு கற்றாலும் அவர்கள் கல்லாதவர்கள் என்று கூறுகின்றார்.
பிள்ளைகள் தங்கள் நடத்தையில் கட்டொழுங்கினைப் பின்பற்றி நடப்பதில் பெற்றோர்களுக்கு அதிகப் பொறுப்பு உண்டு. அதனால் நம் சமயத்தின் அடையாளத்தையும் சிறு வயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டும் என்றும் பேராசிரியர் கேட்டுக் கொண்டார்.இதற்கு உதாரணமாக நானே உங்கள் முன்னால் இருக்கின்றேன். நானும் தோட்டப்புறத்தில் பிறந்து வளர்ந்தேன்.அங்குள்ள தமிழ்ப்பள்ளியில் கல்விக்கற்றேன். கூடவே சமயத்தையும் ஒழுக்கத்தையும் பின்பற்றினேன். இன்று ஒரு பேராசிரியராகவும் உள்ளேன் என்று தன்னையே எடுத்துகாட்டாக காட்டி பேசியபோது மாணவர்கள் வியந்து பார்த்தனர்.
இந்த ஒழுக்கத்தில் என்னை வளர்த்தது தாய் மொழி தமிழ்.கல்வியில் பேராசிரியராக உயர்த்தியது பெற்றோர்களின் கண்டிப்பு தான் என்பதை உங்கள் முன்னிலையில் பெருமையுடன் கூறுகின்றேன். சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டதற்கு இறைவன் மீது நம்பிக்கை வைத்தது. அதற்கு ருக்குன் நெகராவுக்கு தலை வணங்குகிறேன் என்றார்.
மாணவர்களே நீங்கள் அனைவருமே கல்வியில், ஒழுக்கத்தில் சமயத்தையும் கடைப்பிடித்து வந்தால் எதிர்காலத்தில் நீங்களும் நாட்டின் நற்குடி மக்களாக பார்க்கப்படுவீர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. இந்நிலையில், எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் பொதுத் தேர்வு எழுதும் உங்கள் எண்ணங்கள் செயல்கள் எல்லாம் கற்றுணர்ந்த பாடங்களில் செலுத்த வேண்டும்.
தேர்வில் வெற்றியைக் குறித்து உங்கள் மதிப்பெண்கள் காட்டும். அது போன்று நல்ல பிள்ளைகள் என்று சமுதாயம் வழங்கும் மதிப்பெண்கள்களால் தான் உங்கள் வாழ்க்கையை வெற்றியின் சிகரத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றீர்கள். இதற்கு காரணம் பெற்றோர்களே என்பதை மறுக்க முடியாது. இவ்வாறான பெற்றோர்களின் செயல்பாடுகளால் மாணவர்கள் முன்னேற்றம் என்பது உறுதிப்படுத்த முடிகிறது என்றும் அவர் பேசினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



